5 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட புத்தளம் - மதுரங்குளி சுற்றுலா தகவல் மற்றும் வசதிகள் மையத்தின் இன்றைய நிலை.
புத்தளம்- மதுரங்குளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள,
“மதுரங்குளி சுற்றுலா தகவல்
மற்றும் வசதிகள் மையம்” திறந்து வைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்தும், எவ்வித பயன்பாடுமின்றிக் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றதென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், கடந்த அரசாங்க காலப்பகுதியில், 50 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேச சபையின் கோரிக்கைக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடம், வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான ஒன்றாகும்.
கடைத் தொகுதிகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளை உள்ளடக்கி இக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகள், கற்பிட்டி, வில்பத்து மற்றும் வடக்கு பிரதேசங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக செல்லும் போது, அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் தகவல்களை வழங்குதல், இச் சுற்றுலா மையத்தின் நோக்கமாகும்.
இச் சுற்றுலா மையத்துக்கு தேவையான நீர், மின்சார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த வருடம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மற்றும், அப்போதைய சுற்றுலா அபிவிருத்தி பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ ஆகியோரால், இச் சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு பொறுப்பேற்றிருந்த ஒப்பந்தக்காரர்களுக்கு, கொடுப்பனவு உரிய முறையில் வழங்கப்படாமையால், கட்டடத்தின் ஒரு சில பகுதிகள் பூர்த்தி செய்யப்படாது காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் பிரதேச சபையின் கோரிக்கைக்கமைய, இக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது தற்போது வடமேடல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படுவதால், அக் கட்டடம் பயன்பாடின்றி காணப்படுவதாக தெவிக்கப்படுகிறது.
5 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட புத்தளம் - மதுரங்குளி சுற்றுலா தகவல் மற்றும் வசதிகள் மையத்தின் இன்றைய நிலை.
Reviewed by nafees
on
August 17, 2018
Rating: