-எம்.வை.அமீர் -
கல்முனையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் தீர்க்கப்பாடாதுள்ள திண்மக்கழிவு அகற்றும் பிரச்சினையை
எப்போது தீர்த்து வைப்பீர்கள்? சாய்ந்தமருதிலும் ஒரு மீதொட்டமுல்லயை உருவாக்கப்போகிறீர்களா? இதற்கு கல்முனை மாநகரசபை முன்வைக்கும் தீர்வுதான் என்ன?
உள்ளுராட்சிசபையின் ஊடாக ஊரை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என மக்கள் அங்கீகாரத்தைப் பெற்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகமே? எங்கே உங்களைக் காணோம்? அதிகாரங்கள் உங்கள் கையில் இருக்கும்போது ஏன் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையே இங்கு குவியும் குப்பைகள் உனது கண்ணுக்கு புலப்படவில்லையா? கல்முனை பொலிசாரே உங்களது வேலைகளை போலிஸ் நிலையத்துடன் மட்டும் முடக்கிக்கொண்டீர்களா? முகநூல் போராளிகளே! மக்கள் நீதிமன்றங்களே!! உங்களது பார்வைக்கு சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி குப்பைமேடு உள்ளிட்ட குப்பைமேடுகள் உங்களது கண்களுக்கு புலப்படவில்லையா?
கல்முனை மாநகரசபையே எப்போது எந்த வீதியால் வருவாய் என மக்களுக்கு அறிவிப்பாயா? இரகசியமாக வந்து சவாரி செய்யாது உனது வாகனங்களுக்கு சத்தம் எழுப்பக்கூடிய ஏதாவது ஒன்றை பொருத்துவாயா?
சுகாதார பணிமனையே வீடுகளை மட்டும் கண்காணித்து தண்டனை பெற்றுக்கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது பொது இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றவில்லை என எத்தனை முறை கல்முனை மாநகரசபைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளாய் மக்களுக்கு வெளிப்படுத்துவாயா?
சாய்ந்தமருது மக்களின் கழிவகற்றல் தொடர்பான பிரச்சினைக்கு யார் தீர்வைப் பெற்றுத்தருவது? மக்கள் குறித்த பிரதேசங்களில் குடியிருக்க முடியவில்லை வீதிகளால் பயணிக்க முடியவில்லை அரசே! சாய்ந்தமருது மக்களின் அவலத்தை கண்திறந்துபார். அல்லது டெங்கு போன்ற நோயில் இருந்து இந்த மக்கள் தங்களைப் பாது காத்துக்கொள்ள ஏதாவது அங்கியாவது வழங்கு.
சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகமே பதவிகளை பெறுவதற்காக மக்களை ஒன்றுதிரட்டிய உங்களுக்கு இவ்வாறன பொதுப் பிரச்சினைக்கு மக்களை ஒன்று திரட்டி தீர்வைப் பெற்றுத்தரமுடியாதா?
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்து மக்களின் கைகள் உங்களை நோக்கியே நீளும் விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுங்கள்.
கல்முனை மாநகரசபையே! கண்திறந்து பார்!!
Reviewed by Madawala News
on
March 13, 2018
Rating: