இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினர்
என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதான சந்தேகநபர்கள் 10 பேர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர், அவர்கள் அனைவரும் கடந்த 7ஆம் திகதியன்றே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள், கெங்கல்ல, கிம்புல்கொட, தம்புள்ளை, பங்கதெனிய, சிலாபம், ரஜவெல, பலாங்கொட மற்றும் முருத்தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும், இவர்களுள் பாடசாலை மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களுள் முக்கியமானவரான விதான பதிரனகே அமித் ஜீவ வீரசிங்கவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, கண்டி- நத்தரம்பொத்தயில் உள்ள அவரது அலுவலகம், நேற்று (13) அதிகாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன்போது இன வன்முறைகளைக் தூண்டக்
கூடிய பதாதைகள், சுவரொட்டிகள், கையேடுகள் உள்ளிட்ட 1,000க்கும் அதிகமானவை கைப்பற்றப்பட்டன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
“எனவே, கைப்பற்றப்பட்ட பொருட்கள், சந்தேகநபர்களது அலைபேசி உரையாடல்கள் என்பனவற்றை ஆராய விசேட தொழில்நுட்ப நிபுணர்களின் உதவிகள் பெறப்பட்டுள்ளன” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அமித் வீரசிங்கவின் அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு 'பல விடயங்கள்' சிக்கின.
Reviewed by Madawala News
on
March 14, 2018
Rating: