அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் (இறக்குமதியாகும்) சீனியின் விலை அதிகரிப்பு
புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை தற்போது 275 ரூபாவிலிருந்து 280 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்னவிடம் செய்திப் பிரிவு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர் அவ்வாறான விலை அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை உயர்விற்கான காரணம் குறித்து புறக்கோட்டையில் உள்ள பல மொத்த வர்த்தகர்களிடம் வினவியபோது, அதற்கான காரணத்தை வெளிப்படுத்த அவர்கள் மறுத்துள்ளனர்.
தற்போதைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
(கடந்த வாரத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 6.6 சதவீதத்தினால் வலுவடைந்துள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது)
இவ்வாறான பின்னணியில் சீனியின் விலை அதிகரித்துள்ளமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அண்மைய நாட்களில் சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் தாக்கத்தினால் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக வினவியபோது, சுங்க அதிகாரிகள் சங்கம் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததையடுத்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டு, பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்துள்ளார்