தென் கொரியா மற்றும் ஜப்பானில் தொழில் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குருநாகலில் உள்ள முக்கிய இடமொன்றில் இளைஞர்களை ஒன்று திரட்டி தென் கொரியா மற்றும் ஜப்பானில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குருநாகலில் உள்ள இடத்தை சோதனை செய்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 77,000 பணம் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து ஒரு நபருக்கு பதிவுக் கட்டணமாக 1500 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது.கண் பரிசோதனை விளக்கப்படம் மற்றும் தென் கொரியா மற்றும் ஜப்பானில் இலவச வேலைகளைக் காண்பிக்கும் பதாகை என்பன கைப்பற்றுள்ளது.
குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் 200,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு 2022 அக்டோபர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.