நாட்டில் திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி,
நீண்டகாலத்திற்கு மக்களை வரிசைகளில் காத்திருக்கவைத்து, எரிபொருள் விநியோகத்தை எந்தவொரு தனியார் நிறுவனத்திடமேனும் ஒப்படையுங்கள் என்று மக்களை அவர்களது வாயினால் கூறவைப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.
அதன்மூலம் நாட்டின் முக்கிய வளங்களை தனியார்மயப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்துவருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாக தற்போது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன், படுகுழிக்குள் விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு மட்டம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு, அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான உதவிகளை சர்வதேச நாடுகளிடம் கோரியிருப்பதாகக்கூறி அந்நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, அப்புகைப்படத்தை வெளியிடுகின்றார்கள்.
அதன்மூலம் புகைப்பட அரசியல் முறையொன்றைக் கட்டியெழுப்பியிருக்கின்றார்கள். ஆனால் இன்னமும் பொருளாதார நிலைவரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நாட்டிற்கு அடுத்த எரிபொருள் கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னரே வரும் என்று சாகல ரத்நாயக்க கூறுகின்றார். எனவே அதுவரையில் எரிபொருளின்றி பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும்.
இதனைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தைத் தனியார்மயப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.
திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, நீண்டகாலத்திற்கு மக்களை வரிசைகளில் காத்திருக்கவைத்து, எரிபொருள் விநியோகத்தை எந்தவொரு தனியார் நிறுவனத்திடமேனும் ஒப்படையுங்கள் என்று அவர்களை அவர்களது வாயினால் கூறவைப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்
அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது ஏன் தெரியுமா? I
Reviewed by Madawala News
on
July 02, 2022
Rating: