சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முடங்கியமை
நாட்டிற்கு பேரிழப்பாகும்!
சப்புகஸ்கந்த மசகு (கச்சா) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி தொழிற்பட ஆரம்பித்தது முதல் இன்றுவரை இலங்கையின் 40% விகித எரிபொருள் தேவையை ஈடு செய்து வந்துள்ளது.
ஈரானின் மென் மசகு எண்ணெய் அரேபிய மென் மசகு எண்ணெய் என்பவற்றை சுத்திகரிப்பதற்காக ஈரான் தேசத்தின் உதவிவியுடன் தினமும் 38000 பெரல் எண்ணெய்யை சுத்திகரிப்பதற்காக சகல உட்கட்டமைப்பு வசதிகளுடனும் சுமார் 165 ஏக்கர் நிலப்பரப்பில் 65 பாரிய களஞ்சிய தாங்கிகளுடன் மேற்படி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு தற்போது தினமும் 50000 பெரல் எண்ணெய்யை சுத்திகரிக்கும் தரத்தில் இருக்கின்றது.
ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அரசு அரசு உடன்பாடுகளுடன் (கச்சா) மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து இங்கு பெட்ரல், டீஸல், எரிவாயு, லாம்பெண்ணெய், விமானங்களுக்கு தேவையான ஜெட் ஒயில் என பல பெட்ரோலிய வகையறாக்கள் பிரித்து உற்பத்தி செய்யப்பட்டன.
இலங்கையின் எரிபொருள் தேவையில் 40% விகிதத்தை ஈடுசெய்த சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் பெரலுக்கு சுமார் 20 டாலர்களை மீதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
என்றாலும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த பிழையான கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடி காரணமாகவே அது முடக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
நேரடியாக அரசாங்கங்களுடனான அமைச்சர் மட்ட இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை மோசடிகள் நிறைந்த தனியார் கம்பனிகளிடமிருந்து வாங்க முற்பட்டமையினால் தான் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய முடியமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை தனியார் இந்திய அதானி கம்பனியிற்கு தாரை வார்த்தமை, பெற்றோலிய கூட்டுத் தாபணத்தின் மூதலீட்டில் ஹம்பந்தோட்டை துறைமுகத்துடன் நிர்மாணிக்கப்பட்ட அதிநவீன களஞ்சிய தாங்கிகளை சீனாவிற்கு தாரை வார்த்தமை எல்லாம் ஊழல் மோசடிகள் நிறைந்த தேசிய வளங்களை தாரை வார்கின்ற தேசத் தூரோகங்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
இலங்கை வருடாந்தம் எரிபொருள் எரிவாயுவிற்காக சுமார் 150 கோடி அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் சப்புகஸ்கந்தையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை சுமார் 25 கோடி டாலர் வருவாய்க்கு ஏற்றுமதி செய்திருந்தமை அதிகம் பேசப்படாத விடயமாகும், திருமலை ஹம்பந்தோட்டை எண்ணெய் களஞ்சிய தாங்கிகளை பயன்படுத்தி இலங்கை ஈட்ட வேண்டிய வெளிநாட்டுச் செலாவணியை ஊழல் மோசடி ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பிற நாடுகளுக்கு தாரை வளர்ப்பதன் மூலம் இலங்கையின் எரிபொருள் எரிசக்தி மின்சாரம் என பல பிரதான துறைகள் எம்மிடமிருந்தது பறிபோகும் ஆபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இலங்கையில் இன்னும் அதிகமாக மக்கள் (மண்) லாம்பெண்ணெயை பாவிப்பதனால் அதனை வழங்க முடியாமைக்கான காரணம் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் முடக்கப் பட்டமையாகும், அதைவிட சற்று தரத்தில் கூடிய விமணங்களுக்கான எண்ணெய்யை சுத்திகரித்து பிறநாட்டு விமானங்களுக்கு கூடிய விலைக்கு வழங்குவதால் கிடைக்கும் இலாபத்தை கவனத்தில் கொண்டு தான் இதுவரை காலமும் லாம்பெண்ணையை குறைந்த விலைக்கு விற்றதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியா உற்பட பிற நாட்டு விமானங்கள் இலங்கையின் ஜெட் ஆயிலை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும் அது தரத்தில் உயர்ந்ததாக இருப்பதாகவும் தற்போது இலங்கை விமானங்களும் பிறநாடுகளில் எரிபொருளை பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
உலகில் தற்போது லாம்பெண்ணெய் உற்பத்தி அரிதாகிவிட்டதால் விமானங்களுக்கான ஜெட் ஒயிலையே இறக்குமதி செய்து சிவப்பு நிரமூட்டிய லாம்பெண்ணெயாக அதிக கூடிய விலையில் மக்களுக்கு வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள்!
தேசிய நலன்களையும் வளங்களையும் காப்போம்!
தொடரும்...
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
19.06.2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முடங்கியமை நாட்டிற்கு பேரிழப்பாகும்! I
Reviewed by Madawala News
on
June 19, 2022
Rating: