தங்க நகைகளை கொள்ளையிட்டு, விழுங்கிய நபர் பொலிஸாரால் கைது... எக்ஸ்ரே பரிசோதனையில் விழுங்கியது ஊர்ஜிதம். i
பாலித ஆரியவன்ஸ
தங்க நகைகளை கொள்ளையிட்டு, அதனை விழுங்கிய சந்தேகநபர் ஒருவர், கைதுசெய்யப்பட்டுள்ளார்
என, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர், அண்மையில் பதுளை ரஜமஹா விகாரைக்கு வந்திருந்த 16 வயது சிறுவன் அணிந்திருந்த 4 இலட்சம் ரூபாய் கைச்சங்கிலியை திருடிச் சென்றிருந்த நிலையிலேயே, கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை- வினிதகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த கைச்சங்கிலியை திருடி விழுங்கியுள்ளதாகவும் அது தற்போது தனது வயிற்றில் இருப்பதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சந்தேகநபர், பதுளை பொது வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவரது வயிறு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது வயிற்றுக்குள் தங்க கைச்சங்கிலி இருப்பது உறுதியானதுடன், வயிற்றிலிருந்த சங்கிலியும் வைத்தியர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் நகைகளை கொள்ளையிட்டு விழுங்கியுள்ளமை தெரியவந்துள்ளதுடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.