நியூஸிலாந்தில், 2008ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் சிகரெட்டுகளோ, பிற புகையிலை பொருட்களோ வாங்க முடியாது.
- ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நியூஸிலாந்தில் புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தனித்துவமான சட்டம் கொண்டு
வருகிறார்கள். இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகைபிடிக்க தடையாக அமையும். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய சட்டம், அடுத்த வருடம் அமுலுக்கு வரும். இந்த சட்டம் வருடம்தோறும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை அதிகரிக்க வகை செய்யும்.இந்த சட்டம் அமுலுக்கு வந்து, 65 வருடங்களுக்கு பிறகும் கடைகளுக்கு சென்று சிகரெட் வாங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு 80 வயதாகி விட்டது என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பல தசாப்தங்களுக்கு (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்) முன்பாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் மறைந்து விடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 2008ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் சிகரெட்டுகளோ, பிற புகையிலை பொருட்களோ தங்கள் வாழ்நாளில் வாங்க முடியாமல் போய் விடும்.
இதுபற்றி நியூஸிலாந்தின் சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால் கூறும்போது:-
இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்க தொடங்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்” என தெரிவித்தார். நியூசிலாந்து அரசு அமுல்படுத்தவுள்ள இந்த புதிய சட்டத்தை வைத்தியர்களும், சுகாதார நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்த சட்டம் பற்றி ஒட்டகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜானட் கூக் கருத்து தெரிவிக்கையில்:-
இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்தார். 2025ம் ஆண்டுக்குள் நியூஸிலாந்தில் புகைபிடிப்போர் விகிதத்தை 5% குறைக்க இந்த சட்டம் வழிகாட்டும், இறுதியில் அதை முற்றிலுமாக அகற்றும் என்று நியூசிலாந்து அரசு நம்புகிறது.