எதிர்க்கட்சித் தலைவரால் தேசிய பிரச்சினைகளைப் பற்றி மாத்திரமே பேசமுடியுமெனத் தெரிவித்துள்ள
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதேசப் பிரச்சினைகளைக் கேட்டறிவது ஏனைய உறுப்பினர்களின் பொறுப்பாகும். ஆனால், வறுமை நிலையிலுள்ள மக்கள் முகம் கொடுக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் எனக்குத் தேசிய பிரச்சினையாகும் எனத் தெரிவித்துள்ளார்.மொனராகலையில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பலர் எதிர்க்கட்சியை எதிர்ப்பு, சர்ச்சைகளை உருவாக்கும் கட்சியென அடையாளப்படுத்துகின்றனர். எதிர்க்கட்சி வழமை போலவே, எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்ற சிந்தனை அவர்களிடத்தில் வேரூன்றி இருப்பதே, அதற்குப் பிரதானமான காரணமாகும். ஆனால், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாற்றங்களை உடையது என்றார்.
'அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கின்றோம். சிறிய எதிர்க்கட்சி என்றாலும் நாட்டில் முன்னெடுக்கும் ஜனநாயகப் போராட்டங்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கின்றோம்.
ஆனால், சிலர் கூறுவதைப் போன்று எதிர்ப்புகளை முன்வைப்பதோ பிரச்சினைகளை உருவாக்குவதோ எமது கடமையல்ல. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதே எமது நோக்கமாகும்' என்றார்.
ஆகையால், இந்த எதிர்க்கட்சியானது எல்லாவற்றையும் எதிர்க்கும் வழக்கமான சோம்பேறி எதிர்ப்பு மூலோபாயத்தைக் கொண்ட ஓர் எதிர்க்கட்சி அல்ல என்றார்.