பெற்றோராகிய நாங்களே இதனை தவறாக பார்க்காதபோது சிலர் மட்டும் இதனை பெரிதுபடுத்துகிறார்கள் ; ஷுக்ராவின் தாய்
மகளின் வெற்றி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்ட சுக்ராவின் தாய் இஸ்ஸதுல் பாத்திமா.
இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. பல தடைகள் கஷ்டங்களைத் தாண்டி இப்படியொரு வெற்றி கிடைத்துள்ளது. வறுமையினால் நாம் பட்ட கஷ்டங்கள் இனித் தீரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நான் தான் மகளை சைக்கிளில் பாடசாலைக்கும் வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வேன். இதனை சிலர் விமர்சிப்பார்கள். முஸ்லிம் பெண் இப்படி சுற்றுவதா என சீண்டுவார்கள். நான் அதை பொருட்படுத்தவில்லை. பொதுவான ஊர்வி டயங்கள் வந்தால் பெண் என்று ஒதுங்காமல் முன்னின்று செய்வேன்.
ஊருக்கு பாதைபோடக் கூட நான்தான் முன்னின்று செயற்பட்டேன். நான் யாருக்கும் பயப்படவோ ஒதுங்கவோ மாட்டேன். அந்த தைரியம் தான் சுக்ராவிற்கும் இருக்கிறது. மகளின் வெற்றிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சிலர் பாலித தெவரப் பெருமவுடனான வீடியோவை வைத்து விமர்சித்தும் மதத்தை தொடர்புபடுத்தி கண்டித்தும் வருகிறார்கள். எமது முன்னிலையில் தான் அவர் மகளுடன் படம் பிடித்தார்.
அதனை தவறாக நாம் பார்க்கவில்லை. நல்ல உள்ளத்துடன் அவர் வந்து மகளை மனதார பாராட்டிச் சென்றார். மார்க்கம் என்ற பெயரில் சிலர் இதனை விமர்சித்து வருகிறார்கள். நாம் என்றும் மார்க்கத்திற்கு உட்பட்டே நடக்கிறோம். இறைவனுக்கு பயந்தே எதனையும் செய்கிறோம். பெற்றோராகிய நாங்களே இதனை தவறாக பார்க்காதபோது சிலர் மட்டும் இதனை பெரிதுபடுத்துகிறார்கள் என்று கூறி முடித்தார் சுக்ராவின் தாயார்.
- ஷம்ஸ் பாஹிம் - Thinakaran