தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது எனவும், நாங்களும் தூங்க மாட்டோம்
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (வியாழக்கிழமை) ஆசிரியர்களுக்கான விளையாட்டு சீருடைகளை வழங்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'நாங்கள் வழங்கிய
வாக்குறுதிகளின் படி உரிமையுடன் கூடிய அபிவிருத்தி பணிகளை நிச்சயமாக
செய்வோம். அதேபோன்று உரிமை இல்லாத அபிவிருத்தி நிலைக்காது என்பதனையும் மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் பல்வேறு தரப்பினராலும்
முன்வைக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுமாறு நீங்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கு சாட்டுப்போக்குகளை கூறி தப்பிக்கொள்ள முடியாது. தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவோம். வழங்க மாட்டோம்
இதில் ஏதாவது ஒன்றினை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்
இருக்கின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் மாத்திரமே எமக்கான தீர்வினை வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்று கூறி சர்வதேசத்தினை ஏமாற்ற முடியாது.
இதுஆரம்பம் மட்டும் தான் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதன் பின்னர் நான் செய்யும் முதல் வேலைத்திட்டமாக இது காணப்படுகின்றது. உங்களுடன் இணைந்து இதனை ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது“ என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இவ்வாறு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது - நாங்களும் தூங்க மாட்டோம்
Reviewed by Madawala News
on
August 14, 2020
Rating: