ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சைனாவின் வுஹான் நகரில் கொரோனா நோயாளிகளுக்கான 1,000 படுக்கைகள் கொண்ட
வைத்தியசாலை வெறும் 9 நாளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அவ் வைத்தியசாலை செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
உலக சுகாதார அமைப்பானது கொரோனா வியாதியின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து உலக அவசரநிலை அறிவிப்பையும் வெளியிட்டது.
கொரோனோ வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலைகளில் 269,000 சதுர அடி கொண்ட கட்டிடமொன்று தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
SARS வைரஸை சமாளிக்க பீஜிங்கில் 2003 இல் கட்டப்பட்ட வைத்தியசாலையை அடிப்படையாகக் கொண்டு தற்போது இந்த புதிய கட்டிடங்களுக்கான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கட்டுமான வேலையை விரைவுபடுத்துவதற்காக சைனா முழுவதிலுமிருந்து பல பொறியியலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அதுமட்டுமின்றி இந்த வைத்தியசாலையானது மற்ற வைத்தியசாலையிலிருந்து பொருட்களை வரவழைத்துக் கொள்ளவும் , தொழிற்சாலைகளுக்கு உத்தரவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையானது சைனா ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. சுமார் 1,400 ராணுவ வைத்தியர்கள் மக்கள் விடுதலை ராணுவத்திலிருந்து புதிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
1,000 படுக்கையறையுடன் 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன வைத்தியசாலை தயார் நிலையில் உள்ளது. 30 அதி தீவிர சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன.
இன்று முதல் இந்த வைத்தியசாலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சைனா அரசாங்கம் அறிவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த வைத்தியசாலையை கட்டி முடித்துள்ளனர்.
இங்கு பணியாற்றவிருக்கும் பெரும்பாலான வைத்தியர்கள், கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சைனாவில் 650 பொதுமக்களை பலிகொண்ட SARS வைரஸ் காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்காக 9 நாளில் சீனாவில் கட்டிமுடிக்கப்பட்ட வைத்தியசாலை பற்றிய விபரம்.
Reviewed by Madawala News
on
February 03, 2020
Rating: