முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக
நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை ச. தம்பிராசா என்பரின் காணிக்குள் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 27 ஆம் திகதி முதல் பொலிஸாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் நேற்று தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாக வைத்து குறித்த பகுதியில் தோண்டிபார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த பகுதி தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அனைவரும் குழியை மூடிவிட்டு சென்றுள்ளார்கள்.
தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை... இறுதியில் தோல்வி.
Reviewed by Madawala News
on
July 12, 2019
Rating: