முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வளவோ கெஞ்சியும் சமுகத்துக்காகவே அந்த முடிவை எடுத்தோம்.




20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், அமைதி ஏற்பட்ட போது மீளக்குடியேறும் ஆர்வத்திலும்,
எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்திற்கு மக்கள் வந்த போது இந்தப் பிரதேசம் இருந்த நிலைமை, எங்களுடன் வந்த மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு  தெரியும். வாழ்ந்த காணிகள் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தும் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் எல்லாம் தகர்ந்தும், இடிந்தும், உருக்குலைந்தும் கிடந்தன. முசலிப் பிரதேசத்திலுள்ள அத்தனை கிராமங்களும், காடுகள் பின்னப்பட்டு அடையாளம் தெரியாமல் இருந்தன. மொத்தத்தில் இந்தப் பிரதேசம் இருளடைந்து வெறிச்சோடிகிடந்தது.

எங்கே குடியேறுவது..?? 
எப்படி குடியேற்றுவது..?? 
குடியேற்றத்தை எதிலிருந்து ஆரம்பிப்பது..?? என்று எதுவுமே தெரியாது விழித்தவர்களாக நாம் இருந்தோம். எங்கு பார்த்தாலும் போரின் அடையாளங்கள், அதன் எச்சசொச்சங்களான #கண்ணிவெடிகள், #நிலவெடிகள் புதைக்கப்பட்ட சான்றுகள் தென்பட்டன. அந்தப் பிரதேசம் உயிர் அபாயத்தை எச்சரித்தது. இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியிலேதான் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கவேண்டியிருந்தது.

சொந்த பூமியிலே, மீளக்குடியேற வேண்டுமென்ற ஆசை மட்டுமே சிலருக்கு இருந்ததே தவிர, அதற்கான கட்டுமாணங்களோ, வாழ்க்கைக்கான எந்த வசதிகளோ அப்போது இருக்கவில்லை. வாழ்ந்த பூமிக்கு மீள திரும்பவேண்டுமென்று பலர் விரும்பியிருந்த போதும், அதற்கான சூழல் இருக்கவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து பழக்கப்பட்ட தென்னிலங்கை கிராமங்களுடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கையை விட்டு ஓரேயடியாக இந்த மக்கள் எப்படி வருவது என்ற நிலை அகதியாக வாழ்ந்த இடங்களில் வாழ்க்கைக்கு இடப்பட்ட அடித்தளங்கள், பிள்ளைகளின் உறுதியான கல்வி இதற்கு மத்தியிலே தான் சொந்த பூமிக்கு திரும்ப வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. எனினும், எஞ்சிய காலங்களில் தமது சொந்த கிராமத்தில் நிம்மதியாக வாழ முடியுமா..?? என்ற ஏக்கமும், அவர்களிடம் இல்லாமலில்லை. அதுமட்டுமன்றி மீளக்குடியேற எத்தனிக்கும்  பிரதேசத்தில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை மின்சார வசதியில்லை, நீர்வசதியில்லை வாழ்க்கைக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு நம்பிக்கையற்ற சூழலில் ஏதோ ஓர் உந்துதலில் சொந்த பூமியிலே வாழ்ந்தேயாகவேண்டும் என்ற நோக்கில் சிலர் குடியமர வந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கிருந்த அரசியல் பலமும் மக்களை குடியேற்ற வேண்டுமென்ற ஆர்வமும், அவர்களின் குடியேற்றத்திற்கு உதவியது. எங்களால்  முடிந்த அத்தனையையும் செய்தோம். வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைத்துக்கொடுத்தோம். பின்னர் படிப்படியாக வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் என்றெல்லாம் எமது பணிகள் வியாபித்து நின்றன. மாடிக்கட்டிடங்களை கூட கட்ட முடிந்தது. அப்போது இந்தப் பிரதேசத்தில் எங்குமே மின்சாரம் இருக்கவில்லை. 4 ஆம் கட்டை தொடக்கம் அரிப்பு வரையும், #சிலாவத்துறை தொடக்கம் மறிச்சிக்கட்டி வரையும் உள்ளடங்கிய அத்தனை கிராமங்களிலும் வளர்ந்திருந்த காடுகளை துப்பரவாக்கியும், கட்டிட இடிபாடுகளை அகற்றியுமே மக்கள் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தினோம்.  அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கினோம். அபிவிருத்தி பணிகளை படிப்படியாக தொடங்கினோம். வீடுகளை கட்டினோம். ஆந்த வீடுகள் இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளாக பரவி நிற்கின்றன. எவருமே நினைத்து பார்த்திராதவகையில் இறைவனை முன்நிறுத்தி இந்தப்பிணிகளை செய்து வருவதனால் இறைவன் தொடர்ச்சியாக எமக்கு உதவிவருகின்றான். அத்துடன் கடந்த அரசில் எமக்கிருந்த அதிகாரமும், அரச உயர்மட்ட தலைவர்களுடனான நெருக்கமான தொடர்புமே இவற்றையெல்லாம் எம்மால்  சாதிக்கமுடிந்தது.

அதே போன்று இந்த மக்கள் தென்னிலங்கையில் புத்தளம் உள்ளடங்கிய பல பிரதேசங்களில் கஷ்டப்பட்டதை நிதர்சனமாக உணர்ந்தவர்கள் நாங்கள். #அகதி #முகாம்களிலே சகோதர அகதிகளை போன்று பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த காரணத்தினால் அரசியல் மூலமே இந்த துன்பங்களுக்கு விடிவுகட்ட முடியுமென்ற எண்ணம் எனக்கு அப்போதே ஏற்பட்டது.

அந்தவகையில், நல்ல இறையெண்ணத்துடனும், தூய சிந்தனையுடனுமே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்ததனால் தொடர்ச்சியான வெற்றிகளை பெறமுடிந்தது. புத்தளம் கரம்பையிலே அரச காணிகளிலே குடியமர்ந்து அன்றாடம் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கின்ற மக்களின் அவலக்குரலை ஒரு முறை கேட்கமுடிந்தது. நாங்கள் அந்தப் பிரதேசத்திற்கு அரசியல் செய்ய சென்ற போது அங்குள்ள தாய்மார்கள் தமது வாழ்விடத்திற்கு காணி உறுதி பெற்றுத்தருமாறும் வீடுகளை கட்டித்தருமாறும் கோரிக்கைவிடுத்தனர். இறைவனை முன்நிறுத்தி அதற்கான வாக்குறுதிகளை வழங்கினோம்.

எனினும், இதனை நிறைவேற்றுவதற்கான  சக்தி எம்மிடம் இருக்கின்றதா..?? என்ற கேள்வி இருந்தது. அதனை கற்பனை பண்ணிக்கூட எம்மால் பார்க்க முடியாமல்  இருந்தது. தேர்தலில் வெற்றிபெற்றோம். அதிகாரமும் கிடைத்தது. தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்றியே ஆகவேண்டும்.
அந்த காலக்கட்டம் ஐனாதிபதி #சந்திரிகாவின் அரசாங்கம். இந்த மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற நெருடல் மனதில் இருந்ததால் அவரிடம் நேரடியாகச் சென்று உதவி செய்யுமாறு கோரிக்கைவிடுத்தேன்.

நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 32 மில்லியன் டொலர் நிதியுதவி #உலகவங்கியின் உதவியுடன் கடனாகப் பெறப்பட்டு நான் அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அரசிற்கு கீழே ஒதுக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து புத்தளத்திலே  வீடமைப்புத்திட்டங்களை ஆரம்பித்தோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களுக்கான அத்திவாரம் இந்த முயற்சியிலிருந்து தான் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது. புத்தளம் பிரதேசத்திலே ஆயிரக்கணக்கான வீடுகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு கட்டிக்கொண்டிருந்த போது, புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது.

புத்தளம் நகரத்திலே எனது #கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கடைகளை மூடி ஹர்த்தால்களை அனுஷ்டித்தனர். சகோதர முஸ்லிம்களுக்கிடையே நச்சு விதைகள் பரப்பப்பட்டன. இவ்வாறான சதிகளையும், தடைகளையும் தாண்டியே, நாங்கள் எமது முயற்சிகளை தொடர்ந்தோம். மக்களுக்கு வீடுகளை கொடுக்கும் போது தமக்கு கிடைக்கவில்லையே என்று, எனது ஆதரவாளர்களும், உதவி செய்தவர்களும் மனக்குறைபட்டனர்.  எனினும், எந்தவிதமான பாகுபாடுமின்றி நாம் இந்த கைங்கரியத்தை மேற்கொண்டோம். எனக்கு அரசியல் ரீதியில் உதவி அளித்தவர்கள் சிலர் தமக்கு வீடு கிடைக்கவில்லையென்று  என்னைவிட்டு தூரச்சென்ற சம்பவங்கள் நிறையவே இருக்கின்றது நாம் எவருக்குமே அநியாயம் செய்யவில்லை. தகுதியானவர்களுக்கு தராதரம் பாராது நாம் உதவி செய்திருக்கின்றோம். இதனால் அரசியலில் சில பாதிப்புக்களையும் எதிர்நோக்கவேண்டியிருந்தது. எனினும், இறைவனின் திருப்தி எனக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கையில் எனது அரசியல் பயணத்தை தொடர்ந்தேன்.

#மைத்ரிபால #சிறிசேன ஐனாதிபதியாக வருவாரா..?? வரமாட்டாரா..?? 
என்று எல்லோரும் சந்தேகத்துடனும், ஏக்கத்துடனும்  இருந்த வேளை, முஸ்லிம் சமுதாயம அவரது வெற்றிக்காக ஒன்றுபட்டிருந்தது. முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில். இந்த நிலையிலே மன்னார் மாவட்டத்திற்கு வந்து எனது ஆதரவாளர்களையும், கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தினோம். கருத்துக்களை கேட்டறிந்தோம். அப்போது கல்வியியலாளர்கள் சிலர் "மாறவேண்டாம் எது நடந்தாலும் பரவாயில்லை. இருக்கும் இடத்தில் இருங்கள்" என்று அன்பாக வேண்டினர்.

மகிந்த அரசு நமக்கு காணி தந்தது. நமது மக்களை குடியேற்ற உதவியுள்ளது. பல்வேறு உதவிகளை மேற்கொண்டுள்ளது. எனவே நீங்கள் போகவேண்டாம், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று வேண்டிக்கொண்டனர்.  எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி, சில அதிர்ச்சியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த அரசிலே நாங்கள் பலமாகவும், ஆட்சியாளர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் இருந்தோம். நாம் #மகிந்தவைவிட்டு போகமாட்டோம் என்று சிலர் அடித்து கூறினர். எனினும், நாம் எடுத்த முடிவு புதிய ஆட்சியை உருவாக்குவதில் இருந்த  சந்தேகத்தை இல்லாமலாக்கியது. மைதிரி ஆட்சி அமைக்கபோகின்றார்  என்ற தீர்க்கமான உறுதி நிலை நாம் அங்கு போய்ச் சேர்ந்த பின்னர் உருவாகியது. அதுவரை அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகமான  கணிப்பையே வழங்கிவந்தனர்.

முஸ்லிம்களின் மதவிவகாரங்களில் கை வைக்கப்பட்டதனாலும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களினாலுமே இவ்வாறானதொரு  திருப்புமுனைக்கு  நாம் செல்லவேண்டியிருந்தது. அதன் பின்னரே படிப்படியாக புதிய ஆட்சியை அமைக்கும் நோக்கில் அடுத்தடுத்து அரசியல்வாதிகளும், கட்சிகளும் அணிதிரளத்தொடங்கின. இந்த உண்மையை எவராலும் மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.

கடந்த  அரசிலிருந்து நான் வெளியேறுவதற்கு முன்னர் அமைச்சர் பௌசியின்  வீட்டில, முன்னாள் அமைச்சர் #பசில் #ராஜபக்ஸவை சந்தித்து நாங்கள் எடுக்கபோகும் முடிவை மிகவும் கண்ணியமாக தெரிவித்தோம். ஆட்சியாளர்களும், குறிப்பாக பசில் ராஜபக்சவும் வடபுல சமுகத்திற்கு  செய்த உதவிகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்ததோம். எனினும்  நாம் வேறு வழியின்றி தவிர்க்க முடியாதவகையில்  வெளியேறுவதாக எடுத்துரைத்த போது, அவர் உண்மையில் அதிர்ச்சியடைந்தார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வளவோ கெஞ்சியும் சமுகத்துக்காகவே அந்த முடிவை எடுத்தோம்.

வடக்கு முஸ்லிம்களுக்கும், ஏனைய சில இடங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மிகவும் நேர்மையாக இதயசுத்தியோடு உதவி செய்திருக்கின்றார் என்ற விடயத்திற்கு அப்பால் அவர் செய்த நன்றிகளை எல்லாம் நினைத்துக்கொண்டே  நாம் அப்போது அந்த துணிகரமான, முடிவை மேற்கொண்டோம். அதன் பின்னர் #அச்சுறுத்தல்கள், #மீரட்டல்களுக்கு மத்தியிலேதான் தேர்தல் பணிகளை மேற்கொண்டோம். முன்வைத்த காலை பின்வைக்காமல் இறைவனின் உதவியினால் புதிய ஆட்சியை கொண்டுவருவதில் வெற்றிகண்டோம். புதிய ஆட்சி அமைந்த பின்னரும்  முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நன்மையுடன், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தையும் நாம் வலியுறுத்தி நின்றோம்.

புதிய ஆட்சியில் இடம்பெயர்ந்த அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்காக மீள்குடியேற்ற அமைச்சை நாம் கோரிய போது சில காரணங்களை காட்டி, அதனை தட்டிக்கழித்தனர். அதன் பின்னர் நாங்கள் மேற்கொண்ட இடையறாத முயற்சியின் காரணமாகவே மீள்குடியேற்ற செயலணி உதயமானது. இந்த செயலணி வெறுமனே வானத்தால் வந்து குதிக்கவில்லை, மந்திரத்தாலும் வரவில்லை. அரசுக்கு கொடுத்த அழுத்தம், நாம் மேற்கொண்ட முயற்சி மற்றும் அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்கான நியாயமான காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்ததனாலேயே மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டது.

அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பற்றியோ அவர்களின் எதிர்காலத்தை பற்றியோ இத்தனை வருடங்கள் சிந்திக்காத சில அரசியல்வாதிகள் இப்போது எமது முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த செயலணியின் செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்று பாடாய்ப்படுகின்றனர். நாம் மேற்கொண்டு வரும்  அபிவிருத்தி முயற்சிகளை கண்டு கதிகலங்கி நிற்கின்றனர். எம்மிடமிருந்து எப்படியாவது இந்த செயலணியை பிடுங்கிவிடவேண்டுமென்று ஆலாய்ப்பறக்கின்றனர். மீள்குடியேற்ற செயலணியை எம்மிடமிருந்து பறித்துவிடவேண்டுமென்பதில், எதிரணி அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே வெவ்வேறு நோக்கங்கள் இருந்த போதும், அதனை  பிடுங்கிவிடவேண்டுமென்பதில் அவர்களிடம் ஒரே கருத்தொற்றுமையே இருக்கின்றது.

நேர்மையான முறையில் மக்கள் பணியை மேற்கொள்வதால், இறைவனின் துணையும், உதவியும் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது  எனவே, இந்த செயலணியை பறித்தெடுக்கவேண்டுமென்ற எண்ணத்தையும் கனவையும் கைவிட்டுவிட்டு இந்த மக்களுக்காக எம்முடன் இணைந்து நியாயமான முறையில் பணியாற்ற முன்வாருங்கள் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

- சுஐப் எம்.காசிம் -
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வளவோ கெஞ்சியும் சமுகத்துக்காகவே அந்த முடிவை எடுத்தோம். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வளவோ கெஞ்சியும் சமுகத்துக்காகவே அந்த முடிவை எடுத்தோம். Reviewed by Madawala News on October 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.