உலகின் ஏக வல்லரசு என்ற எண்ணத்தோடு உருவெடுத்த அமெரிக்கா சர்வதேச சட்டத்தின் ஆட்சியிலிருந்து
தனக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்பது போலவே செயற்படுகின்றது. நேரடியாக சர்வதேச சட்ட ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கும் அது பலமுறை எத்தனித்துள்ளது. ஆனால், பிற நாடுகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கும் அமெரிக்க அரசு பின் நின்றதில்லை. கடந்த ஐம்பது ஆண்டு கால சர்வதேச அரசியலிலிருந்து இவ்வுண்மை புலனாகின்றது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தோற்றத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த நாடு அமெரிக்காதான். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உலகின் கொடூரமான வன்முறைகள், போர்க்குற்றங்கள் படுகொலைகள், திட்டமிட்டமுறையிலான மனித உரிமை மீறல்கள் ஆகிவை தொடர்பாக தனிமனிதர்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாகிவிடாமல் தடுப்பதற்கு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா முட்டுக்கட்டைகளை விதித்து வந்தது. காரணம் தெளிவானது. உலகில் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்கா இழைத்துவரும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புகூறவேண்டி வரும் என அது உணர்நதமையே, இதற்கான காரணம்.
இந்த நீதிமன்றத்திற்காக உடன்பாடு எட்டப்பட்டபோது, அமெரிக்காவின் தனி நபர்களும் தனது குற்றங்களுக்காக அதன் பால் இழுபடக் கூடுமென அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டது. அமெரிக்காவின் இந்த கவலையும் பதிவு செய்யப்பட்டு உடன்பாட்டுக் குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரு கடைசி வழியாகத்தான். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. பெரும் திரளான மக்களை கொலை செய்தவர்களை அல்லது பிற திட்டமிட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்க உரிய நாடுகள் இணங்கவில்லை அல்லது விரும்பமில்லை என்ற நிலையில் மட்டுமே ஒருநாட்டின் உள் விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிட முடியும். இருந்த போதிலும் அந்த நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரத்திலிருந்து அமெரிக்காவுக்கு முழுக்க முழுக்க கால வரையறையின்றி விதிவிலக்கு அளிக்கப்படும் என்பதை அங்கீகரிக்க வேண்டுமென வொஷிங்டன் பாதுகாப்பு சபையை தொடர்ந்தும் வற்புறுத்தியது. இதை ஏற்க மறுத்தால் பொஸ்னியாவிலும் ஏனைய இடங்களிலும் ஐ.நா. சமாதான நடவடிக்கைகளை தொடர்வதற்கான தீர்மானங்களுக்கெதிராக தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தப் போவதாக மிரட்டியது அமெரிக்கா.
இரண்டு வாரங்களாக நடந்த கசப்பான பேரங்களுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழ்நிலையில் ஒரு சமரச ஏற்பாடு எட்டப்பட்டது. அதன்படி உடன்பாட்டை அங்கீகரிக்காத நாடுகளைச் சேர்ந்த தனி மனிதர்கள் அனைவருக்கும் விதிவிலக்களிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புக் கொண்டது. ஆனால், அந்த விதிவிலக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே என அறித்தது ஐ.நா. கனடா இதனைக் கடுமையாக கண்டித்தது. அமெரிக்காவுக்கு வழங்கப்படும் இச்சலுகை சட்டவிரோதமானது என்று சாடியது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடைமுறைக்கு வருவதை தடுக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அரசு ஒரு புதிய யுக்தியை வகுத்தது. ஏனைய நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு நாடுகளுமே மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு ஒப்படைப்பதில்லை என உறுதியேற்பது என்பதே அந்த யுக்தி.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து நின்ற அமெரிக்க அரசு ருவனடா, பொஸ்னியா, கம்போடியா போன்ற சில குறிப்பிட்ட சூழல்களில் பன்னாட்டு நடுவர் மன்றங்களை அமைக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றது. குறிப்பாக, கம்போடிய விவகாரம் அமெரிக்கா மீதான சுயநலம் சார்ந்த கொள்கையை பளிச்சென வெளிச்சமிட்டு காட்டுகின்றது. இந்தோசீனாவில் போர் முடிவுக்கு வந்தபோது அப்பிராந்தியத்தில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஒரு தனியான திட்ட வட்டமான அணுகுமுறை என எதுவும் இருந்ததில்லை. வியட்னாம், லாவோஸ் நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய பாரிய போர்க்குற்றங்களை விசாரிக்கவென எந்தவொரு பன்னாட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால், கமரூஜ் தலைவர்களை விசாரிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அமெரிக்கா திடீரென ஆதரித்தது. அந்த நடுவர் மன்ற விசாரணை வரம்புகள் இறுதிசெய்யப்பட்ட போது, 1975முதல் 1979வரையிலான கால அளவோடு அதன் அதிகாரம் மட்டுபடுத்தப்படவேண்டும் என்று வொஷிங்டன் கூறியது. அதற்கு முந்தைய ஆண்டுகளோ பிந்தைய ஆண்டுகளோ நடுவர் மன்றதின் அதிகாரத்திற்குட்படுவதை அமெரிக்கா ஆட்சேபித்தது. ஏனெனில், அவ்வாறு முந்தைய, பிந்தைய ஆண்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டால் அமெரிக்காவும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உட்பட்டிருக்கும். 1975க்கு முந்திய கால கட்டம் பற்றிய எந்தவொரு ஆய்வும் இந்தோசீனாவில் ஒரு விரிவான நிலப்பரப்பில் அமெரிக்கா குண்டு மழைபொழிந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கும். 1979 பிந்திய கால கட்டம் குறித்த எந்தவொரு விசாரணையும் 1978இல் கம்போடியாவை ஆக்கிரமித்த கமரூஜ் இயக்கத்திற்கு ஐ.நா. சபையிலும் உலக அளவில் வியட்னாம் அளவிற்கும் அமெரிக்கா அரசியல் ஆதரவளித்த விவகாரத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கும். இதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காகவே அமெரிக்கா சர்வதேச நடுவர் மன்றத்தின் அதிகாரத்தை கால அளவில் வரையறுத்தது.
போட்டியாளர்கள், கருத்துவேறுபாடு கொண்டவர்கள், சார்ந்திருப்பவர்கள் என யாராக இருந்தாலும் சட்டவிதிகளை அடிப்படையாகக் கொண்டதொரு சர்வதேச ஓழுங்கமைப்பின் அடிப்படையில் அவர்களோடு ஒருங்கிணைந்து செயலாற்றுவதிலிருந்து தன்னை விலக்கி கொள்வதில் அமெரிக்க அரசு எப்போதும் பிடிவாதமாகவே இருந்து வருகின்றது.
1990ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் சோவியத் யூனியன் சரிந்து விழுந்ததிலிருந்து முழுமையான இராணுவ மேலாண்மையின் மூலம் தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற திட்டத்தை அமெரிக்கா பின்பற்றி வருகின்றது. இதனால், போர்க்கால குற்றங்கள், கொடூரமான வன்முறைகள், அத்துமீறல்கள் என்பவற்றிலிருந்து அமெரிக்காவுக்கு விதிவிலக்களிக்கப்படுகின்றது. இது இன்று உலகளாவிய அரசியல் நெருக்கடியொன்றை தோற்றுவித்துள்ளது.
நவீன மேற்கத்தைய ஏகாதிபத்தியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நிரவெறிதென்னாபிரிக்கா மிகக் கொடூரமான அரசுகள் கூட தம்மை சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடிக்கும் அரசுகளாகவே காட்டிவந்துள்ளன. சர்வதேச விதிகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், வரன்முறைகள் அனைத்தையும் ஜனநாயகத்தை பரப்புதல் என்ற பெயரில் அமெரிக்கா மீறிவருகின்றது. பிறநாடுகளில் சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்தி வரும் அமெரிக்கா தான் சட்டத்தின் ஆட்சியை உதாசீனம் செய்வதை ஏற்க மறுக்கின்றது.
1990களில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை மற்றும் அதன் குக்கிராமங்கள் மீது அமெரிக்கா நடாத்திய இரசாயன ஆயுத தாக்குதல்களில் மாதமொன்றிற்கு 5000 ஈராக்கிய குழந்தைகள் மரணத்தை தழுவினர்.
2000ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று இலட்சம் ஈராக்கிய குழந்தைகள் கொல்லப்பட்டிருந்ததை யுனிசொப் ஆய்வறிக்கை உறுதிசெய்தது. இரசாயன ஆயுதப் பயன்பாட்டினால் ஏற்பட்ட தாக்கமும் நெறிமுறைகளை மீறிய வகையில் ஈராக் மீது 55 தடவைகள் விதிக்கப்பட்ட பொருளாதார தடையுமே பாரிய மனித படுகொலைக்கு இட்டு சென்றது. அமெரிக்காவின் அப்போதைய இராஜாங்க செயலாளர் மெடலின் அல்பிறைட் பீ.பீ.சீக்கு வழங்கிய பேட்டியில் சதாம் ஹுசைன் அடிபணியாமைக்கு அப்பாவி ஈராக்கிய மக்கள் கொடுத்த இப்பெரிய விலையை நியாயப்படுத்தினார். 2003இல் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு 2013இல் அமெரிக்க படை வெளியேறிச்சென்றபோது 1.5 மில்லியன் ஈராக்கியர்களை அமெரிக்கா கொன்று குவித்திருந்தது. வியட்னாம், லாவோஸ், இந்தோசீன நாடுகளில் அமெரிக்க படையினர் பொழிந்த குண்டு மழையினால் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் மாண்டு மடிந்தனர்.
மத்திய அமெரிக்காவில் செயற்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுடன், தென் அமெரிக்காவின் சர்வதிகாரிகளாக விளங்கிய ஆட்சிபீடங்களுடன், தென்னாபிரிக்க நிறவெறி அரசாங்கத்துடன் அமெரிக்கா வைத்திருந்த உறவுகளை உலகம் அறியும். கொங்கோவில் கூலிப்படைகளை நிறுத்தி சிவில் சமூகத்திற்கு எதிரான ஏவல் போர்களை தூண்டிவிட்ட காட்சிகள் 80களில் அரங்கேறின. அங்கோலாவில் அமெரிக்க அராஜகம் நிகழ்த்திய கொடூர கொலைகளை உலகம் வெகுவாக மறந்து விடாது. இன்று யெமனில் 500 குழந்தைகள் உள்ளிட்ட 2500 பேரை கொண்று குவிப்பதற்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களே காரணமாகும். சிரியாவிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் உலகின் 70க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ளூரில் அமெரிக்காவினால் தூண்டப்பட்ட சிவில் யுத்தங்களுக்கு அமெரிக்காதான் ஆயுதம் வழங்குகின்றது. சட்ட ஆட்சிக்கு எதிராக நிற்கும் அமெரிக்கா எப்படி பிறநாடுகளை தண்டிக்க முடியும் என்பதே இப்போது எழும் கேள்வியாகும்.
அமெரிக்க மயமாக்கலை அமெரிக்கா கைவிடவேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு முதலில் அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஒரே அக்கறை கொண்ட நாடு அமெரிக்கா என்ற போலி வேஷத்தை களைய முன்வரவேண்டும். உலகம் மாறிவிட்டது உலகத்தை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு அமெரிக்கா வரையும் திட்டங்கள் இதற்கு மேல் பலிக்கப்போவதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் குட்டுவெளிப்பட்டுவிட்டது. அமெரிக்கா உலகத்தின் பொலிஸ்காரனாக செயற்படுவதும் இனி எந்த இறைமையுள்ள தேசமும் அங்கீகரிக்கப்போவதில்லை. அமெரிக்கா தொடர்ந்தும் ஜனநாயக நாடாக நீடிக்க வேண்டுமாயின் அதற்கு முன்னாள் உள்ள ஒரே தெரிவு. பிற நாடுகள் போன்று சர்வதேச சட்டத்திற்கு உட்படும் நாடாக தன்னை மாற்றிக்கொள்வதுதான்.
- ரவூப் Zain -
அமெரிக்காவின் போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது யார்?
Reviewed by Madawala News
on
April 20, 2018
Rating: