இறுதிப்போட்டியில் வெல்ல நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை ; ரோஹித் ஷர்மா
“நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக அமையவில்லை"என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6 ஆவது முறையாக கோப்பையை வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் வீறுநடை போட்டு வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் எளிதில் தோல்விய தழுவியது.
இந்நிலையில் இந்திய அணியின் அதிர்ச்சி தோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், “இறுதிப்போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை. குறிப்பாக கோலியும் ராகுலும் நன்றாக ஆடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “பேட்டிங்கின் போது ரன் குவிக்க தவறினோம். குறிப்பாக, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை அடிப்போம் என எதிர்பார்த்தோம். நிச்சயமாக இன்னும் 20-30 ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும். 240 ரன்கள் மட்டும் எடுத்திருக்கும்போது, விக்கெட்டுகளை வேகமாக எடுக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல இரவு நேரத்தில் மின் ஒளிக்கு கீழ் விளையாடும் போது விக்கெட் பேட் செய்ய சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதை காரணமாக சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. ” என்றார்.
“அதேநேரம் ஹெட்டும் லபுஷேனும் சிறப்பாக ஆடினார்கள். எங்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிட்ச்சின் தன்மை காரணமாக இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவதற்கு சுலபமாக இருந்தது. ஆனால், தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம், அவ்வளவுதான்” என்று அவர் தெரிவித்தார்.
No comments: