இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், தெரிவித்தார்.
அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.