பயணித்துக் கொண்டிருந்த ரயிலை, தண்டவாளத்தில் நின்று, நிறுத்த முயன்ற நபர் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சோகம்.
பயணித்துக் கொண்டிருந்த உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார்.
இன்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த ரயில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து கோபமடைந்த நபர் ஒருவர் குடிபோதையில் தண்டவாளத்திற்கு வந்து ரயிலை நிறுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
41 வயதுடைய நபர் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குறித்த நபர் அதே ரயிலில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த நபர் ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments: