மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று மதியம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கொல்லப்பட்டவர் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இவருடன் மேலும் 4 சந்தேக நபர்களுடன் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், சந்தேக நபரும் அவரது குழுவும் கைது செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து, இரண்டு டெட்டனேட்டர்கள், சுமார் இரண்டு கிலோ அமோனியா, இராணுவ சீருடைகளுக்கு நிகரான ஆடைகள் மற்றும் இரண்டு ஜெலட்னயிட் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி நேற்று (28) விடுவிக்கப்பட்ட மூவரில் ஒருவரே மட்டக்குளி பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான மேலும் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்ற திரும்பியபோது அவர் கொடூரமான முறையில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பணமோசடி தொடர்பானதாகும்.
பணமோசடி தொடர்பாக சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் உண்டியல் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கில் ஆஜரான சந்தேக நபர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் வந்த காரை சந்தேக நபரின் கார் பின் தொடர்ந்து சென்றுள்ளது.
விபத்தின் பின்னர் காரில் இருந்து வெளியே வந்த சந்தேகநபர் மீது, பின்னால் காரில் வந்த நபர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
நீதமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்ட மட்டக்குளிய சஃபியா ஒழுங்கையில் வசிக்கும் மொஹமட் பதூர்தீன் மொஹமட் ஹநாஸ் (வயது 38) என்பவர், நேற்று (28) படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதான நபர் நேற்று கொல்லப்பட்ட சம்பவத்தின் மேலதிக விபரங்கள் வெளியாகின..
Reviewed by Madawala News
on
November 29, 2022
Rating: