கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போதான உண்மைக்கு புறம்பான செய்தி கவலையளிக்கிறது.



ஹஸ்பர்_
கிழக்கு மாகாண விளையாட்டு விழா இம் மாதம்
 22,23 ம் திகதிகளில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் கலந்து சிறப்பித்ததுடன் இவ்வருடத்திற்கான சம்பியனாக மட்டக்களப்பு மாவட்டம் வெற்றிவாகை சூடியது இது இவ்வாறிருக்க ஒரு சில தனியார் ஊடகங்களில் கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் வீர வீராங்கனைகளை கடும் சிரமத்தில் ஆழ்த்தியதாக வெளியிடப்பட்ட செய்திகள் உறுதிப்படுத்தப்படாமல் உண்மைக்கு புறம்பாக வெளியிட்டமை குறித்து கவலை அடைவதாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முற்று முழுதாக இச் செய்தியை மறுதளிப்பதாக ஊடகங்களுக்கு இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
மக்களுக்கு தகவல்களை வெளிப்படுத்துகின்ற உரிமை பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற அடிப்படையில் காணப்பட்ட போதும் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஒரு தலைபட்சமாக வெளியிடுவதனால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதுடன் உறுதிப்படுத்தலுடன் குறித்த செய்தியறிக்கை வெளியிடப்பட்டிருஞ்தால் எமது திணைக்களத்திற்கு இவ்வாறான அசௌகரியம் ஏற்பட்டிரூக்காது என நான் கருதுகின்றேன் அதன் அடிப்படையில் எமது பக்க நியாயமாக பின்வரும் விடயங்களை வெளிப்படுத்த விரும்புகின்றேன்
உணவு நீர் மற்றும் போக்குவரத்து வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கும் வகையில் குறித்த இரு வீராங்கனைகளால் வெளிக்கொணரப்பட்டது எனினும் இவ் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய வீரர்களுக்கு உணவு போக்குவரத்து தங்குமிட வசதிகளுக்காக திணைக்களத்தினால் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது என்பதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்பதனால் வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
அதன் படி உணவு மற்றும் போக்குவரத்திற்காக பங்குபற்றிய ஒவ்வொரு வீர வீராங்கனைகளுக்கும் உணவுக்காக ஒரு நாளைக்கு தலா 1000 ரூபா வீதம் இரு நாட்களுக்கு 2000 ரூபா வழங்கப்பட்டதுடன் விசேடமாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த வீரர்களுக்கு போட்டி முடிவடைந்து வீடு செல்லும் வழியில் இரவு உணவுக்காக மேலதிகமாக தலா 300 ரூபா வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக விருந்தினர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்ட போது குறித்த சிற்றுண்டி உணவுப் பொதி சகல வீர வீராங்கனைகளுக்கும் பொறுப்பான உத்தியோகத்தர் மூலமாக வழங்கப்பட்டது அத்துடன் மைதானத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலமாக பெறப்பட்ட குடி நீர் வசதியினை வீர வீராங்கனைகள் பெற்றுக் கொள்வதற்காக குடி நீர் பவுசர் நிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மைதானத்தில் தேசிய நீர்வழங்கல் சபையின் குடி நீர் இணைப்பு காணப்படுகிறது.
ஒரு வீராங்கனையினால் திருகோணமலை மாவட்டம் சார்பாக 10 அல்லது 15 வீரர்களே கலந்து கொண்டமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனினும் இவ் இறுதி விளையாட்டு விழாவில் மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்று மாகாண மட்டத்துக்கு 170 வீர வீராங்கனைகள் தெரிவாகி பங்குபற்றியிருந்தனர். அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரூந்து 59 வீரர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 57 வீரர்களும் அம்பாறை மாவட்டம் சார்பாக 54 வீரர்களும் பங்கேற்றிருந்தனர்.
மேலும் மாவட்ட அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபையின் கட்டண நியமங்களுக்கு ஏற்ப உரிய மாவட்டங்களில் இருந்து குறித்த மைதானத்துக்கு வந்து செல்வதற்கான கட்டணங்களின் அடிப்படையில் போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் குறித்த ஊடகத்தின் செய்தியில் கருத்து வெளியிட்ட குறித்த இரு வீராங்கனைகளும் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களுக்கு தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் குறித்த தங்குமிடத்தில் அவர்கள் தங்கவில்லை அத்துடன் அதில் ஒரு வீராங்கனை போட்டி நடைபெறும் உரிய நேரத்துக்கு சமூகமளிக்காமல் கால தாமதமாகி வருகை தந்ததன் காரணமாக தான் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சியை தவறவிட்டிருந்தார் அதேபோல் கொடுப்பனவுகள் வழங்கும் போது வீரர்களுக்கு பொறுப்பான விளையாட்டு உத்தியோகத்தர் முன்னிலையில் வழங்கப்படவேண்டியிருந்ததனால் மற்றைய வீரர்களை போட்டி நடைபெறும் தினத்தன்று வருகை தந்து தமக்கு பொறுப்பான விளையாட்டு உத்தியோகத்தரை உரிய நேரத்துக்கு தொடர்பு கொண்டு அக்கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளவில்லை எவ்வாறாயினும் கொடுப்பனவுகள் வழங்கும் நேரத்தை கடந்தும் சிரமம் பாராது அவ்வீராங்கனைகளுக்கு உணவு மற்றும் பிரயானக் கொடுப்பனவு வழங்க எம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கூடாரம் வீரர்களுக்கு பாதுகாப்பான அடிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை தொடர்பான குற்றச்சாட்டு குறித்த வீர வீராங்கனைகளால் வெளிக்கொணரப்பட்டது எனினும் குறித்த கூடாரமானது பிரதேசத்தில் நிலவிய பலத்த காற்றை கவனத்திற் கொண்டு உயரமாக அமைக்கப்படாமல் பொறுத்தமான பாதுகாப்பானதும் உறுதியானதுமாக மற்றும் காற்றை தாக்கிப்பிடிக்கும் வகையிலும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த தினத்தன்று நிலவிய எதிர்பாராத மிக பலத்த காற்று காரணமாக கூடாரத்தின் மேல் விரிப்பு சிதைவடைந்தது உண்மையே எனினும் உடனடியாக அதனை திறம்பட சீர் செய்திருந்தோம் மேலும் மைதானத்தின் குறித்த கூடாரத்து மேலதிகமாக இன்னும் பல கூடாரங்கள் வீரர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை .
அதேபோல் மைதானத்தில் ஓடு பாதையில் ஓடிய வீராங்கனை தவறி விழுந்தமையினை சுட்டிக்காட்டி உணவு மற்றும் குடி நீர் வழங்கப்படாமை காரணமாக இவ் விபத்து ஏற்பட்டதாக சித்தரிக்கும் வகையில் வெளிக்கொணரப்பட்டதாக இச் செய்தி அமைந்துள்ளமை மறுக்கப்பட வேண்டியதாகும் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சியின் போது வீரர்களுக்கு இவ்வாறான விபத்துக்கள் இடம் பெறுவது இயல்பானதொன்றாகும் எனினும் செய்தியில் வழங்கப்படவில்லை என குறிப்பிட்ட வசதிகள் அனைத்தும் வீரர்களுக்கு பொறுப்பான அலுவலகர்கள் ஊடாக வழங்கப்பட்டிருந்ததுடன் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான முதலுதவி வழங்குவதற்கான வைத்தியர் உட்பட முதலுதவிக் குழுவும் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.
அடுத்த குற்றச்சாட்டாக அமைவது டீசேர்ட் வழங்கப்பட்டமை தொடர்பானதாகும் அதாவது ஊழியர்களுக்கு டீசேர்ட் வழங்கப்பட்ட போதிலும் வீர வீராங்கனைகளுக்கு வழங்கப்படவில்லை என்பதாகும் விளையாட்டு விழாவின் போது அணியப்பட்ட டீசேர்டானது போட்டி ஒழுங்கமைப்பாளர்களுக்கும் நடுவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது ஆயினும் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்ற செல்லுகின்ற போது தெரிவு செய்யப்பட்ட அனைத்து வீர வீராங்கனைகளுக்கு காலணி மற்றும் விளையாட்டுக்கு தேவையான உடைகள் விளையாட்டு திணைக்களத்தினால் வழங்கப்படுவது வழமையாகும் அதன் படி இவ் வருடமும் பங்குபற்ற உள்ள வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டு உடைகள் மற்றும் காலணிகள் என்பன வழங்கும் முகமாகவே அவர்களது அளவுகள் பெறப்பட்டன.
அதன் படி ஒரு சில தனியார் ஊடகங்கள் வாயிலாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய செய்தியறிக்கைகளில் வீராங்கனைகள் இருவரும் எமது திணைக்களம் அபகீர்த்திக்கு உட்படுகின்ற அடிப்படையில் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் வருத்தத்தை தெரிவிப்பதுடன் ஊடக ஒழுக்க நெறிமுறைகளுக்கு இணங்க எமது பக்க நியாயத்தையும் உள்ளடக்கி உண்மை தகவல்களை ஒளிபரப்பி இருப்பின் இவ்வாறான அசௌகரிமங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதனையும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போதான உண்மைக்கு புறம்பான செய்தி கவலையளிக்கிறது. கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போதான உண்மைக்கு புறம்பான செய்தி கவலையளிக்கிறது. Reviewed by Madawala News on September 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.