ராஜபக்ஷாக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை எந்தவொரு மத்திய கிழக்கு நாடும் எமக்கு உதவ முன்வர மாட்டாது. I
(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சிகள் இணைந்து இவ்வாரம் முழுவதும்
பாராளுமன்ற அமர்வினை புறக்கணிப்பதற்கு தீர்மானித்ததைப் போன்று , இதே ஒற்றுமையுடன் வெகுவிரைவில் ரணில் - கோட்டா அரசாங்கத்தையும் பதவி விலகச் செய்வோம்.
இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் நிறைவடையும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சகல எதிர்க்கட்சிகளினதும் தலைவர்களுடனும் கலந்துரையாடி இவ்வார பாராளுமன்ற அமர்வினை புறக்கணிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் வெற்றியளித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கைக்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பனவும் , சுயாதீன இயங்கும் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளன.
நாட்டில் உணவு, மருந்து, எரிபொருள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் நிலவும் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் பாராளுமன்றத்தில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குவது குறித்த தீர்க்கமான எந்தவொரு விவாதமும் இடம்பெறவில்லை.
மாறாக ஆளுங்கட்சியினர் நேரத்தை வீணடிக்கும் வகையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். கோட்டாபய ராஜபக்ஷ என்ற தனியொரு நபரின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மருந்து இன்றியும் உணவு இன்றியும் மக்களை கொல்வதற்காக ஜனாதிபதி மக்களாணை வழங்கப்படவில்லை. இவற்றுக்கு உரிய தீர்வு சரியாதொரு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதேயாகும்.
காரணம் ராஜபக்ஷாக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் இலங்கைக்கு உதவ முன்வரப்போவதில்லை. அத்தோடு ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் மத்திய கிழக்கு நாடுகளும் எமக்கு உதவ முன்வர மாட்டா.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி எம்மிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இவை அனைத்தையும் எம்மால் சரி செய்ய முடியும். பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போது ஒரு வார காலத்திற்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்த அராசங்கத்தின் ஆயுட்காலம் நிறைவடையும் நேரம் வெகு தொலைவில் இல்லை. இன்று பாராளுமன்ற அமர்வினைப் புறக்கணிப்பதற்கு அனைத்து எதிர்தரப்பினரும் இணைந்து தீர்மானம் எடுத்ததைப் போன்று, ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தையும் பதவி நீக்குவோம் என்றார்.
ராஜபக்ஷாக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை எந்தவொரு மத்திய கிழக்கு நாடும் எமக்கு உதவ முன்வர மாட்டாது. I
Reviewed by Madawala News
on
June 22, 2022
Rating: