சிம்பாப்வேயில் மோசமடைந்திருக்கும் பணவீக்கத்தால் வாங்கும் திறன் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் அமெரிக்க டொலரில் சம்பளம் தரும்படி கோரி சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தாதியர், மருத்துவர், மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவ தொழில்முறையாளர்கள் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு திரும்பவில்லை. இந்த வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மிகைப்பணவீக்கத்தால் சிம்பாப்வே பொருளாதாரம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதோடு அந்நாட்டின் நாணய மதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.
நாட்டின் பணவீக்கம் 132 வீதம் உயர்ந்திருக்கும் சூழலில் அதிக நிலையான நாணயமாக இருக்கும் அமெரிக்க டொலரில் சம்பளம் தரும்படியான கோரிக்கை சிம்பாப்வேயில் அதிகரித்துள்ளது.
மிகைப்பணவீக்கத்தால் சிம்பாப்வேயின் உள்ளூர் நாணயம் மதிப்பிழந்ததை அடுத்து 2009 இல் அந்த நாடு அமெரிக்க டொலருக்கு மாறியது. எனினும் 2019 இல் அந்த நாடு மீண்டும் சொந்த நாணயத்துக்கு மாறியபோதும், அமெரிக்க டொலருக்கு நிகரான அதன் பெறுமதியை தக்கவைத்துக்கொள்ள தவறியுள்ளது.
தொழிலாளர் பிரச்சினை விரைவாக தீர்க்கப்படாவிட்டால் உயிர்கள் பறிபோகலாம் என்று சிம்பாப்வே தாதியர் சங்கத்தின் செயலாளர் நாயகம் எனொக் டொங்கோ எச்சரித்துள்ளார்.