VIDEO : பிள்ளைக்கு கஷ்டம் வந்தால் தனது நகையை அடகுவைத்து தாய் கொடுப்பதில்லையா? நாட்டின் தங்கம் கையிருப்பில் குறைவு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விளக்கம்
நாடு தொடர்பில் சிந்தித்தே மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை நான்
பொறுப்பேற்றுக் கொண்டேன் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivat Cabral) தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இதுவரையில் உயர்மட்ட சம்பளத்தைப் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை (12-01-2022) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் மத்திய வங்கியின் ஆளுநராக கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இருந்துள்ளேன். நான் 40 வருட அனுபவமுள்ள பட்டயக் கணக்காளர். நான் மத்திய வங்கியில் மாதம் 70 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்தேன். ஒரு பாஸ் அவுட் ஆன கணக்காளர் கூட இந்த தொகைக்கு வேலை செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்.
மேலும், 7 ஆண்டுகளாக குறித்த சம்பளத்திற்கு வேலை செய்தேன். பின்னர்தான் எனது நியமனக் கடிதத்தில் ஓய்வூதியம் இருப்பதைப் பார்த்தேன். நான்கு வருடங்கள் கழித்து அப்போதைய ஆளுநரிடம் இப்படி ஒரு கடிதம் இருக்கிறதா, அதற்கு பணம் தருவீர்களா என்று கேட்டேன்.
இது தொடர்பில் ஆராய்ந்து அறிவிப்போம் என அவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, இது பணம் செலுத்தத் தகுதியற்றது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்த முடியாது என கூறியிருந்தார்.
குறித்த விடயத்தை அங்கேயே விட்டுவிட்டேன். அதற்கு மேல் நான் பேசியதில்லை. அதற்கு நான் கடிதம் கூட எழுதவில்லை. அரசியல் பழிவாங்கல் பிரிவினரிடம் கூட சொல்லவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு அறிவிக்கப்பட்டது.
எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று. செலுத்த உள்ளதை செலுத்துங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நான் கூறினேன். ஆனால் நான் மீண்டும் கோரிக்கை வைக்க மாட்டேன் என குறிப்பிட்டார்.
அதேவேளை, அந்நிய செலாவணி நாட்டிற்குள் வர ஆரம்பித்ததை அடுத்தே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார் .
வாகனங்கள் மற்றும் டயில் தவிர்ந்த ஏனைய அனைத்து அத்தியாவசியமற்ற பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதனூடாக பாரியளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியில் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை மீண்டும் வழமை போன்று வருகைத் தர ஆரம்பித்ததை அடுத்தே, அந்நிய செலாவணி நாட்டிற்குள் மீள வர ஆரம்பிக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறினார்.
நாட்டில் இருந்த தங்க கையிருப்பில் குறைவு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விளக்கம் வழங்கிய மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால்,
“பிள்ளைக்கு கஷ்டம் வந்தால் தனது நகையை அடகுவைத்து தாய் கொடுப்பதில்லையா? அந்த தாய் போலவே இலங்கை மத்திய வங்கி செயற்படுகிறது..”
என இது தொடர்பில் விளக்கம் அளித்தார்.
VIDEO : பிள்ளைக்கு கஷ்டம் வந்தால் தனது நகையை அடகுவைத்து தாய் கொடுப்பதில்லையா? நாட்டின் தங்கம் கையிருப்பில் குறைவு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விளக்கம்
Reviewed by Madawala News
on
January 13, 2022
Rating: