நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்றில் பல பள்ளிவாசல்களில் கடமைபுரிபவர்களின் சம்பளம் 15000 ரூபாய்க்கும்
குறைவாக இருப்பதாக பலர் முறையிட்டுள்ளனர்.இக்கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அநேக பள்ளிவாசல்களின் வருமானம் போதாமையே இதற்கு காரணமாகவும் இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்ய புதிய திட்டங்களை உருவாக்கியிருந்த வேளையில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. விரைவில் இக்குறைகள் நிவர்த்திக்கப்படும் என நம்புகின்றோம் என்று அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்
மன்புல் கைராத் அரபுக்கல்லூரியின் ஹிப்ழுல் குர்ஆன் தமாம் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ரியாஸ்தீன் ஹாபிஸ் (ஹக்கானி) அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 8 மாணவர்கள் குர்ஆணை மனனம் செய்து தமாம் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
மேலும் எமது பள்ளிவாசல் வெளிப்புறத்தில் இப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களை விளையாடுமாறு வேண்டிக் கொண்டதற்கினங்க கடந்த ஒருவருடத்துக்கு மேல் அவர்கள் இங்கே விளையாடிகொண்டிருக்கின்றனர். அப்படி விளையாடும் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்த்துக்கொள்வதுடன் வீணான பழக்க வழக்கங்களிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். இதனால் தூய்மையான எதிர்கால சந்ததிகளை நாம் வளர்த்தெடுக்க முடியும். அவ்வாறு விளையாடும்போது பள்ளிவாசலின் சொத்துக்களுக்கு ஏதாவது சேதம்கள் ஏற்பட்டால் அதனை என்னிடம் தெரிவிக்குமாறும் அக்குழந்தைகளை நொந்துகொள்ள வேண்டாம் எனவும் இங்கு கடமை புரிபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் அகில இலங்கை அரபுக் கல்லூரியின் தலைவர் அஸ்ரப் மௌலவி, விரிவுரையாளர் கலாநிதி ராசிக் மௌலவி, கலாநிதி சித்தீக் ஹாபிஸ், நீதவான்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மன்புல் கைராத் அரபுக் கல்லூரியின் நிருவாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.