எனது பிள்ளைகளை அவர்களின் தந்தையைக் கொன்றவர்களை வெறுக்கும் வகையில் வளர்க்கமாட்டேன் ; பௌத்த போதனைகளின்படி கருணை காட்டும் வகையில் வளர்ப்பேன்.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொலைச் செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவியான நிலுஷி திசாநாயக்க,
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பிரியந்த குமாரவின் நினைவாக இடம்பெற்ற அனுதாப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனது கணவருக்கு நீதி கிடைக்கும் வகையில், குற்றவாளிகளை விரைவில் தண்டிக்குமாறு பிரதமர் இம்ரான் கானிடம் கேட்டுக் கொள்கிறேன். இது பழிவாங்குவதற்காக அல்ல. இது போன்ற செயல் எதிர்காலத்தில் யாருக்கும் இடம்பெறக்கூடாது என்பதற்காக என பிரியந்த குமாரவின் மனைவி இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக உயர் ஸ்தானிகராலயத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
மேலும், எனக்கு ஆதரவளித்த இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எனது பிள்ளைகளை அவர்களின் தந்தையைக் கொன்றவர்களை வெறுக்கும் வகையில் வளர்க்கமாட்டேன். பௌத்த போதனைகளின்படி அவர்களிடம் கருணை காட்டும் வகையில் வளர்ப்பேன் என பிரியந்த குமாரவின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.