மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுங்கள். மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் பிரதானிகளிடம் ஜனாதிபதி இன்று கோரிக்கை விடுத்தார்.
மக்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
மின்வெட்டு தொடர்பான நிலைமைகள் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் பிரதானிகளுடன் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிலக்கரி மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் நிலக்கரி கையிருப்பு மின்சார நெருக்கடியை ஏற்படுத்தாமல் நிர்வகிக்க போதுமானதாக உள்ளது. எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தியை நிர்வகிப்பதன் மூலம் மின்வெட்டை தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலைமையை சமாளித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் காமினி லொக்குகே, உதய கம்மன்பில, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நிதிச் செயலாளர் எஸ்.ஆர். திரு.ஆட்டிகல, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.