மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பகுதியில் பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர் அவரது நண்பர் குழுவுடன் பெண்ணின் உறவினர் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரு பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில், குறித்த பெண்ணை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் இதனையடுத்து இருவரது உறவினர்களுக்கிடையே இரண்டு தடவைகள் கைகலப்பு ஏற்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இருபக்கமும் சமாதானமாக சென்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை ((09) இரவு 7 மணியளவில் ஜெயந்திபுரத்தில் வீதியில் வைத்து குறித்த பெண்ணின் உறவினர் மீது இளைஞனின் குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதையடுத்து 7 பேர் படுகாயமடைந்த நிலையில், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி தப்பிச்சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில்.... வாள்வெட்டு தாக்குதலில் 7 பேர் படுகாயம்
Reviewed by Madawala News
on
January 10, 2022
Rating: