2021 இல் பல சவால்களை முறியடித்து நீர்வழங்கல் அமைச்சு சாதனை -
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார2025 இல் அனைவருக்கும் குடிநீர் தேசிய திட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டில் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் சாதனை இலக்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அடைந்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த வெற்றியை பெற்றுத்தந்த அனைத்து கௌரவமும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டட அனைத்து பணியாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் , கொரோனா தொற்று நிலைமையில் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் புதிய நீர் இணைப்புக்களை வழங்கியமை விசேட செயற்பாடு என தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற நீர் வழங்கல் அமைச்சின் முன்னேற்ற பகுப்பாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டுக்கான 183,044 இலக்கை விஞ்சி 200,244 புதிய இணைப்புகளை வழங்குவதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு முடிந்துள்ளது. இது சுமார் ஒரு மில்லியனுக்கு அண்மித்த மக்களுக்கு ஒரு வருடத்துக்குள் குடி நீரை வழங்கிய முதலாவது சந்தர்ப்பமாகும்.
இதற்கு மேலதிகமாக, கிராமிய கஷ்டப் பிரதேசங்களுக்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஊடாக 59,420 குடிநீர் இணைப்புக்கள் வழங்கியுள்ளதாகவும், 103 சிறிய அளவிலான நீர் இணைப்புத் திட்டங்கள் ஊடாக 13,411 இணைப்புக்களும் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் துப்புரவு நடவடிக்கைகளுக்காக கழிவறை நிர்மாணம், பாடசாலை துப்புரவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், தம்பான பிரதேசத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ருவன்வெல்ல பிரதேசத்திற்கு கழிவுநீர் திட்ட வசதிகளை அமுல்படுத்துதல், புனித நகர பகுதிகளில் பொது கழிவறை வசதிகள் நிர்மாணம், அங்கவீனமானவர்களுக்கு சுகாதார வசதிகளை செய்துகொடுத்தல் போன்ற 25,632 பயனாளி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல் என்பன 2021 ஆம் ஆண்டில் முக்கியமான செயற்பாடாகும் என அமைச்சர் மேலும் கூறினார்.
2022 ஆம் ஆண்டிற்குள் 380,709 புதிய குடிநீர் இணைப்புகளை வழங்குவதே எங்களின் இலக்கு என்றும், 400,000 புதிய குடிநீர் இணைப்புகளை எப்படியாவது எட்டுவோம் என்றும், எங்கள் பொறியியல் ஊழியர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டது எனக்கும் இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பலமாக உள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத்பந்து விக்ரம, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி. விஜயபந்து, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க மற்றும் நாடு பூராகவும் உள்ள நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள் நிகழ்நிலை தொழிநுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அமீன் எம் றிலான்
கௌரவ அமைச்சரின்
ஊடக அதிகாரி (தமிழ் )