வளிமண்டலத்தில் இலங்கைக்கு அருகில் காணப்படும் தாழ் அமுக்கப் பிரதேசத்தின் நிலையும் எதிர்பார்க்கப்படும் மழை வீழ்ச்சியும்.
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியுடன் இணைந்ததாக வளிமண்டலத்தின்
கீழ் மட்டத்தில் காணப்பட்ட தளம்பல் நிலையானது தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. இது தற்பொழுது இலங்கைக்குகிழக்கே நிலைகொண்டுள்ளது.நாடு முழுவதிலும் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
*************************
இலஙகைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலை கொண்டுள்ளதனால்
கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம் கொழும்பு ஊடாக காலி வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இலஙகைக்கு மேற்காக ஆழ்கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 km இலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பானநிலையில் காணப்படும்.
கலாநிதி
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.