கந்தளாய் யூசுப்
கிண்ணியாவில் படகு மூழ்கி 4 மாணவர்கள்
உட்பட அறுவர் பலி.
ஆசிரியரும் அவரது முன்பள்ளி மகளும் பலி.
அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டு கிண்ணியா சோகத்தில்
கிண்ணியா நகர சபையும் கிண்ணியா பிரதேச சபையும் இணைக்கும் குறிஞ்சாக்கேணி ஆற்றில் படகு மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானதுடன் சிகிச்சைக்காக 10 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.30 மணி அளவில் குறிஞ்சாக்கேணி கரையிலிருந்து கிண்ணியா நகரசபை கரையை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த படகே இவ்வாறு கவிழ்ந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறிஞ்சாகேணி பகுதியிலிருந்து இந்தப் படகில் பாடசாலைக்குச் சென்ற பல மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிலர்
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதான சப்ரியா என்ற முன் பள்ளி ஆசிரியரும் அவரது 3 வயதான முன்பள்ளி மகனான
சேகுசகி என்ற சிறுவனும் அடங்குகின்றனர்.
மேலும் ஆறு வயதான பாத்திமா சகிலா, ஆறு வயதான பரீஸ் பஹி எட்டு வயதான பாத்திமா சிரின் ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு 70 வயதான சேகு அப்துல் காதர் என்ற வயோதிபரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, முதலாம் தரத்தில் கற்கின்ற மூன்று மாணவர்களும் முதலாம் தரத்தில் கட்டுகின்ற ஒரு மாணவரும் தரம் 5 ல் கற்கின்ற ஒரு மாணவனும் உட்பட ஐந்து மாணவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
மேலும் கிண்ணியா தள வைத்தியசாலையில் சாதாரண விடுதியில் 5 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, விபத்து தொடர்பாக பொதுமக்கள் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை கிண்ணியாவில் மேற்கொண்டு வருகின்றனர.
கிண்ணியா பிரதேச செயலகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு முன்னாலும் மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்களின் ஈடுபட்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
கிண்ணியாவில் உயிரிழந்தோர் விபரம்..
Reviewed by Madawala News
on
November 23, 2021
Rating: