மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த
சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் வருகைதந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனைவி, கணவரை பொல்லால் தாக்கியுள்ளதை அடுத்து, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அதிகாலை தனது மாமியார் வீட்டிற்குச் சென்று குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியிலும் நேற்றிரவு மனைவியின் கடுமையான தாக்குதலுக்குள்ளான கணவர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி மற்றும் ஒரு கணவர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
September 19, 2021
Rating: