தகவல் :- என்.எம். அப்துல்லாஹ்
யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
யாழ்ப்பாணம் மர்யம் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது.
அந்த வகையில் பெருநாள் தொழுகை இன்று (21) காலை 6.30 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையில் பெருந்திரளான யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.
கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பின்பற்றி தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.பி.எம்.அஸ்ஹர்
கல்முனைப்பிரதேசத்தில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை இன்று காலை மிகவும் அமைதியான முறையில் இடம் பெற்றது.சுகாதார நடை முறைகளைப்பின்பற்றி பள்ளி வாயல்களில் இடம் பெற்ற இத்தொழுகைளில் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டனர்.
மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில்
தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொரோனா அலையின் மூன்றாம் அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இடம்பெற்றது. இன்றைய குத்பா பிரசங்கம் மற்றும் பெருநாள் தொழுகையை ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் நிகழ்த்தினார்.
நூருல் ஹுதா உமர்