உஸ்பெகிஸ்தான் பிரஜையான பெண் ஒருவரை நாட்டுக்கு அழைத்துவந்து பாலியல் நடவடிக்கைகளுக்காக
பயன்படுத்தியமை தொடர்பில் வௌ்ளவத்தையில் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நேற்று (20) தெரிவித்தார்.
31 வயதான ஒருவரே இவ்வாறு நேற்று முன்தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளனார் எனக் கூறிய அவர், தொழில் பெற்றுத்தருவதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்படி பெண் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, பின்னர் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனார் எனக் கூறினார்.
புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பினூடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபரின் மனைவியும் மற்றுமோர் உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண் எனத் தெரிவித்த ஊடகப்பேச்சாளர், இதனை போன்றதொரு குற்றச் சம்பவத்தில் அந்தப் பெண் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, தற்போது இலங்கைச் சிறையில் உள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலும் வெளிநாட்டில் இருந்தும் பெண்களை அழைத்துவந்து பாலியல் நடவடிக்கை மற்றும் விபசாரத்தில் ஈடுபடுவது 1995 மற்றும் 2006ஆம் ஆண்டு இலங்கை தண்டனை
சட்டக்கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமைய குற்றச்செயலாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோரை 10 வருடங்கள் முதல் 20 வருடங்கள் சிறையிலடைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மேற்படி உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்ய ஆதரவளித்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.