அசாத்சாலி விவகாரம்... இரு வாரங்களில் முடிவு வரும் வாய்ப்பு.



(எம்.எப்.எம்.பஸீர்)
கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில்
அசாத்சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் அடுத்த இரு வாரங்களில் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும் என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, குறித்த மனுவை அவசர அவசியம் கருதிய மனுவாக கருதி எதிர்வரும் 28 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

இது குறித்த மனு நேற்று உயர்நீதிமன்ற நீதியர்சர் எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.



நேற்றைய தினம் மனு மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், அசாத்சாலி ஊடக சந்திப்பொன்றில் கூரிய கருத்துக்கள் குறித்த விசாரணை நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.


' அந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அது குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை கோவையை ஆராய்ந்த பின்னர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதா இல்லையா, அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். அடுத்து வரும் ஒரு வாரத்துக்குள் அது சாத்தியமாகும்.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.



இதன்போது நீதியர்சர் எல்.டி.பி. தெஹிதெனிய, மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலான விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த அவர் அவ்விசாரணைகள், இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் அதனை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.



இதன்போது அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட் சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா, சந்ரகேஷ் பிருந்தா உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்தனர்.


இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் வாதங்களை முன்வைத்து, இவ்விரு குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் மனுதாரரான அசாத் சாலிக்கு எந்த தொடர்புகளும் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் ஊடகங்களுக்கு அளித்த சர்ச்சைக்குரியது என கூறப்படும் கருத்தில், எந்த குரோத மனப்பான்மையையும் தூண்டும் விடயங்களும், மக்களை தவறாக வழி நடாத்தும் விடயங்களும் இல்லை எனவும், குறித்த கருத்தினை வெளிப்படுத்தும் போது அவரது நோக்கம் பிரச்சினைகளை ஏற்படுத்துவது அல்ல என்பதையும் மன்றுக்கு நிரூபிக்க தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் குறிப்பிட்டார்.



அத்துடன் மாவனெல்லை சம்பவத்துடனும் அசாத்சாலிக்கு எந்த தொடர்புகளும் இல்லை எனவும் அவசியம் எனில் இவை தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பணங்களை முன்வைக்கவும் தயார் என ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா குறிப்பிட்டார். .



இதனையடுத்து, குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியர்சர்கள் குழாம், எதிர்வரும் 28 ஆம் திகதிவரை வழக்கை ஒத்தி வைத்தது. அன்றைய தினம் அவ்வழக்கை பரிசீலனைக்கு எடுக்க, அவசர அவசியம் கருதிய மனுவாக இம்மனுவை நீதிமன்றம் பெயரிட்டது.



தீவிரவாத பயங்கரவாத சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாகவிருந்தமை, வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் மற்றும் 21.04.2019 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இந்த சந்தேக நபருக்கு உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிப்பதாக அசாத் சாலி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை தடுத்து வைக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி கடந்த 19 ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கு அவரை தடுத்து வைக்க அனுமதிப்பதாக ஜனாதிபதி குறித்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே சி.ஐ.டி.யினர் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் தாக்கல் செய்த பி அறிக்கையில், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியமை, அவர்களை பாதுகாத்து அவர்களுக்காக செயற்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் அசாத் சாலியிடம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அசாத்சாலி விவகாரம்... இரு வாரங்களில் முடிவு வரும் வாய்ப்பு. அசாத்சாலி விவகாரம்... இரு வாரங்களில் முடிவு வரும் வாய்ப்பு. Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.