ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் சவாலாக அமையும்... எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையானது ஐக்கிய மக்கள்
சக்திக்கு பெரும் சவாலாக அமையுமெனத் தெரிவித்த துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அரசாங்கத்துக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லையெனத் தெரிவித்த அவர் நல்லாட்சி அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் முழுமையாக புறக்கணித்துள்ளனர்” என்றார். “ரணில் சிறந்ததோர் அரசியல்வாதி ஆனால் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்கும் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளனர்” என்றார்.
இதேவேளை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக் கொள்ளமுடியும். அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுகிறன. பல்வேறு கொள்கையினை கொண்ட கட்சிகள் ஒன்றினைந்து அரசாங்கத்தை அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. இக்கருத்து முரண்பாடு அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றார்.