இலங்கையில் பல ஜமாஅத்துக்கள் அமைப்புக்கள் உள்ளன. இவற்றின் முக்கிய நோக்கம் என்பது முஸ்லிம்களுக்கு
நல்லதை சொல்வதும் அவர்களின் தேவைகளை தீர்க்கும் முகமாக நலன்புரி சேவைகளை செய்வதுமாகும்.இவ்வாறு நலன்புரியை நோக்காக கொண்ட அமைப்புக்கள் ஊர் ஊராக கிளைகளை ஆரம்பிப்பதால் இவை பற்றிய சந்தேகங்கள் எழுகின்றன.
அண்மைக்காலமாக இஸ்லாத்தைப்பேசும் ஜமாஅத்துக்களை பற்றிய சந்தேகம் உலகளாவிய ரீதியில் பேசப்படுகிறது. என்னைப்பொறுத்த வரை இது பூனைகளை புலியாக காட்டுவதாகவே தெரிகிறது. ஸஹ்ரான் என்பவன் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காக அனைத்து தவ்ஹீத் அமைப்புக்களும் சந்தேகம் கொண்டு பார்க்கப்படுகிறது. அரசாங்கம் பெரும்பாலும் சிங்கள மக்களை கொண்டது என்பதால் அவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.
கடித்த நுளம்பு எது என தெரியாத போது அனைத்து நுளம்பும் அடி வாங்கத்தான் செய்யும்.
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்படுமுன் அவர்கள் தமது இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்திருந்தனர். பின்னர் புலி இயக்கம் தடை செய்யப்பட்ட போதும் புலிகளின் கட்சி தடை செய்யப்படவில்லை.
அதே போல் புலிகள் என்ற பெயரில் அரசியல் கட்சி பதியப்படுவதும் தடை செய்யப்படவில்லை. பயங்கரவாதியாக இருந்து ஜனநாயகத்துக்கு வந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை உருவாக்கி இன்று பாராளுமன்றில் இருக்கும் பிள்ளையானைப்பார்த்து முஸ்லிம் இயக்கங்கள் படிப்பினை பெற வேண்டும். இதனை பல வருடங்களாக நான் சொல்லிவருகிறேன்.
ஒரு நலன்புரி அமைப்பால் என்னதான் சேவை செய்ய முடியும்?
வெளிநாட்டு பணம் பெற்று சில வீடுகள், கிணறுகள், பள்ளிகள், அனாதைகளுக்கு உதவுதல் போன்றவற்றைத்தான் செய்ய முடியும். இதை மக்கள் ஆணை பெற்ற, இறைவனுக்கு பயந்த இஸ்லாமியவாதிகளைக்கொண்ட, ஊழல் செய்ய விரும்பாத ஜனநாயக அரசியல் கட்சியால் செய்ய முடியும்.
ஒரு நலன்புரி அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தால் ஏன் எதற்கு என்ற கேள்விகள் இருக்கும். பாராளுமன்ற பலம் வாய்ந்த அரசியல் கட்சியாயின் அரசின் உதவியுடன் இவற்றை செய்ய முடியும்.
முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் கல்முனையில் பல வீடமைப்புத்திட்டங்களை அரசின் அணுசரணையுடன் செய்தார். அதற்குரிய கணக்குகள் அரசாங்கத்திடமே உள்ளதால் அது பற்றி யாரும் பிரச்சினை பட முடியாது.
வெளிநாட்டு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் இன்னமும் பிரச்சினையில் உள்ளன.
ஆகவே இந்த நாட்டில் துப்பாக்கி தூக்கிய ஜேவிபி, புலிகள் போன்றோர் அரசியல் செய்து சாதிக்கும் போது துப்பாக்கி தூக்காத இஸ்லாமியவாதிகள் வெறுமனே சமூகத்துள் கருத்துக்களை விதைத்து குழப்பங்களை ஏற்படுத்தி, சமூகத்தில் பிளவுகளை உண்டாக்காமல் அனைவரும் இந்த நாட்டின் ஜனநாயக அரசியலை ஏற்று உண்மை, நேர்மை, வாய்மை கொண்ட அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டு சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முன் வரவேண்டும்.
சண்டித்தனம், ஆயுதங்களால் எதையும் இங்கு சாதிக்க முடியாது. மக்கள் தரும் அரசியல் பலத்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.
இன்று நம் நாட்டில் பாராளுமன்றில் உள்ள அரசியல் கட்சிகள் ஊழல், மோசடி, ஏமாற்று, பாட்டு, கூத்து, மது, மாது, சூது என ஆகிவிட்டன. இந்த நிலையில் இவற்றை விரும்பாத இஸ்லாமிய தலைவர்கள் எமது கருத்தை ஏற்று நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி ( உலமா கட்சி) அன்பான அழைப்பை விடுக்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத்
7.4.2021