இரயில் வர ஒரு சில நிமிடங்களுக்கு முன் ரயில் கடவையை திறக்குமாறு கோரி வாயில் காப்பாளர் மீது சிலர் தாக்குதல். #பேராதனை
(எம்.ஏ அமீனுல்லா)
பேராதனை- எழுகொட குறுக்கு வீதியில் உள்ள ரயில் வாயில் காப்பாளர் ஒருவரை தாக்கி அவரது
பாதுகாப்பு அறையையும் சேதப்படுத்தியமை தொடர்பில் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இரு முச்சக்கர சாரதிகள் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று (6) அதிகாலை 4,00 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில்வே கடவை மூடப்பட்டிருக்கும் போது முச்சக்கர வண்டி சாரதி வந்து திறக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி கடந்த 4 ஆம் திகதி காலையில் ரயில்வே வாயில் காப்பாளர் அச்சுறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது : ரயில் வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் இருக்கும் போது ரயில் கடவையை திறக்குமாறு முச்சக்கர வண்டி சாரதி கட்டாயப்படுத்தியுள்ளதாக வாயில் காப்பாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்
இதனையடுத்து வாயில் காப்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கண்டியில் இருந்து கொழும்புக்கு அதிகாலை 4.30 மணி மற்றும் அதிகாலை 5.10 மணிக்கு பயணித்த இரண்டு ரயில்களும் சுமார் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சமில் ரத்நாயக்க தெரிவித்தார்