இலங்கையில் கொவிட் 19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு
அனுமதிக்கப்பட்டமைக்கு பல்வேறு முஸ்லிம் நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.குறிப்பாக பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
இந்த தீர்மானத்தை மேற்கொண்டமைக்காக அரசாங்கத்துக்கு நன்றித் தெரிவிப்பதாக, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதேநேரம், இலங்கையில் கொவிட் மரணங்கள் தொடர்பான தமது கொள்கையை மாற்றியமைத்தமையை வரவேற்பதாக ஆப்கானிஸ்தானின் இலங்கைக்கான தூதுவர் எம். அஷ்ரஃப் ஹைதார் தமதுடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் துருக்கியின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹாமி அக்சோய், இந்த தீர்மானத்தை வரவேற்றிருப்பதுடன், கொவிட் நோயாளர்களது மத நம்பிக்கைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொவிட் நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை தகனம் செய்வது என்ற கட்டாயக்கொள்கையை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து வந்தது.
இதற்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த கொள்கையை மாற்றியமைத்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதேநேரம் கொவிட் நோயால் மரணிப்போரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான வழிகாட்டல்கள் குறித்து இன்று அதுசார்ந்த நிபுணர்கள் குழுவினால் ஆராயப்பட்டு, எதிர்வரும் வார முற்பகுதியில் அந்த வழிகாட்டி வெளியாக்கப்படும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.