இந்த ஜனாசா எரித்தல் தொடரில் சம்பந்த பட்டவர்களை எப்படி
ஆட்டமிழக்க வைப்பது, தொடரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்று யாருக்கும் புரியாத நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கிளீன் போல்டாக்கியவர்கள் இருவர்.
ஒருவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். மற்றவர் ஜெனீவாவில் குரல் கொடுத்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் [The Organization of Islamic Cooperation (OIC)] செயலாளர் Yousef Al-Othaimeen
OIC நாடுகளின் செயலாளரின் காட்டமான அறிக்கை எத்தனை பவர்புல்லானது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.
1973 ஆம் ஆண்டு இஸ்ரேலின் புனித தினமொன்றில் எகிப்தும் சிரியாவும் திடீரென இஸ்ரேல் மீது சரமாரியாய் தாக்குதல் தொடுத்தன. சவூதி மன்னர் பைசல் , எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத்துக்கு லைக் போட்டு ஆசீர்வாதம் செய்து வைத்தார்.திணறிப் போன இஸ்ரேல் 1967 யுத்தத்தில் எகிப்திடமிருந்து பறித்த சினாய் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இழந்தது.பின்னர் சுதாரித்துக் கொண்டு இஸ்ரேல் திருப்பி அடித்தாலும் அதன் போரியல் வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகிப் போனது இந்த யுத்த காண்டம்..
பல உலக நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க யுத்தம் நிறுத்தப்பட்டது என்றாலும் முஸ்லிம் நாடுகள் அத்தனையும் ஓரணியில் திரண்டன.இஸ்ரேலை ஆதரிக்கும் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் , உட்பட ஐரோப்பா நாடுகளிற்கு இனிமேல் பெட்ரோல் தரப் போவதில்லை என்ற பதைபதைக்கும் அதிரடி அறிவிப்பை அறிவித்தன.
OIC இன் தீர்மானத்திற்கு சல்யூட் அடித்த பெட்ரோலியக் கூட்டமைப்பான ஒபெக் அதன் அத்தனை வாசல் கதவுகளையும் ஜன்னல்களையும் இழுத்து மூடியது.யாருமே கற்பனையில் கூட நினைக்காத இந்தக் கூத்தால் உலகம் மிரண்டு போனது. ஜெனரல் மோட்டர்ஸும் , போர்டும், மிட்சுபிசியும் ,டொயாட்டாவும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டன.அமெரிக்கா குறைந்த பெட்ரோல் செலவில் கூடிய தூரம் செல்லக் கூடிய மினி வாகனங்களைத் தயாரிக்கும் தீர்மானத்திற்கு வந்தது.
பிரான்ஸும் ஜப்பானும் ஓடி வந்து இஸ்லாமியக் கூட்டமைப்பின் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்தன. பிரிட்டன் ,"இனிமேல் இஸ்ரேல் பலஸ்தீன் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதில்லை "என்று பகிரங்கமாய் அறிவித்தது.
கடைசியில் இந்தத் தடையை கூட்டமைப்பு நீக்கிக் கொண்டது.இவ்வளவும் நடந்து அடுத்த வருடம் சவூதி மன்னர் பைசல் யாராலேயோ கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் முஸ்லிம் நாடுகள் இப்படி ஒன்று சேர்ந்துவிடாமல் அமெரிக்கா கவனமாய்ப் பார்த்துக் கொண்டது மற்றும் சவூதியை தனது பொம்மையாக்கியது எல்லாம் வேற சப்ஜெக்ட்..
இவ்வளவு அதிகாரமும் பவரும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிற்கு இருக்கிறது.
ஆனால் படுமெத்தனமாய் சாப்பிட்டுத் தூங்கிக் கொண்டு ப்ராய்லர் கோழி மாதிரி இருக்கிறது.
திடீரென்று உலகளாவிய முஸ்லிம்களின் அழுத்தங்களால் விழித்துக் கொண்டது.மீண்டும் அது தூங்கச் செல்ல முன்பு இங்கே எமக்கெதிராய் நடந்த உரிமை மீறல்களை எல்லாம் பட்டியலிட்டு ஆவணப்படுத்தி அதன் கையில் கொடுக்க வேண்டும்..
எங்கே அடித்தால் எங்கு வலிக்கும் அங்கே அடிக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் படிப்பினை தந்துவிட்டு சென்றுவிட்டது.
Man of the Match அவார்ட் இருவருக்கு வழங்கப்படுவதில்லை என்றாலும் இப்போதைக்கு வெற்றி பெற்ற இந்த விவகாரத்தின் Man of the Match அவார்டை இம்ரான்கானுடன் சேர்ந்து OIC நாடுகளின் செயலாளர் யூஸுபுக்கும் வழங்கி வைப்போம்..
(By: zafar Ahmed )
"மேன் ஒப் த மேட்ச் "
Reviewed by Madawala News
on
February 26, 2021
Rating: