பாகிஸ்தானில் உள்ள 40 அடி புத்தர் சிலையை தரிசிக்க இலங்கை மக்கள் வர வேண்டும் என்ற இம்ரான் கானின் அழைப்பை பாராட்டுகிறோம்
பாகிஸ்தானில் உள்ள 40 அடி உறங்கும் புத்தர் சிலையை தரிசிக்க இலங்கை மக்கள் வர வேண்டும்
என்ற பாகிஸ்தான் பிரதமரின் அழைப்புக்காக உலமா கட்சி பிரதமர் இம்ரான் கானுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
முஸ்லிம் நாடுகளில் உள்ள சிலைகளை அந்நாடுகள் உடைக்கின்றன என இலங்கையில் உள்ள சில இனவாத பௌத்த பிக்குகள் சொல்லும் நிலையில் பழமை வாய்ந்த 40 அடி புத்தர் சிலை இன்னமும் பாகிஸ்தானில் இருக்கிறது என்ற செய்தியை பாகிஸ்தான் பிரதமர் சொன்னதன் மூலம் சில பிக்குகளின் கருத்துக்கள் பிழையானவை என நிரூபிக்கப்படுகின்றது.
முன்னர் இலங்கை மக்கள் பாகிஸ்தான் சென்று வர இலவச விசா அந்நாட்டில் இறங்கியவுடன் கிடைக்கும் நிலை இருந்தது. பின்னர் இலங்கையில் நிலவிய பயங்கரவாத யுத்தம் காரணமாக அவ்வாறு விசா வழங்குவது நிறுத்தப்பட்டது.
தற்போது எமது ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பு, பாகிஸ்தானின் இராணுவ உதவி காரணமாக யுத்தம் நிறைவு பெற்றுள்ளதால் மீண்டும் பழையபடி போல் விசா வழங்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
40 அடி புத்தர் சிலையை காண இலங்கையர் வர வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் செல்ல இன வேறுபாடு இன்றி அனைத்து இலங்கையரும் சென்று வர அரசும் பாகிஸ்தான் தூதுவராலயமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதே போல் பாகிஸ்தான் சென்று புத்தர் சிலையை காண இலங்கையில் உள்ள புத்த பிக்குகளுக்கும் ஏனைய சமய தலைவர்களுக்கும் இலங்கை அரசு இலவசமாக பயண ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.