கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு இணையாக,
நோய் எதிர்ப்பு பானத்தை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை அரச ஆயர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கொவிட்-19 நோயார்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரச வைத்தியர்களான தங்களுக்கு ஏன் இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என அந்த சங்கத்தின் பொருளாளர், ஆயர்வேத வைத்தியர் சத்துர ராஜபக்ஷ வினவியுள்ளார்.
தற்போது நிறுவப்பட்டுள்ள தங்களது பல்லேகலை ஆயர்வேத வைத்தியசாலைக்கு அந்த வசதிகளை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இதேநேரம், குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் ஊடக செயலாளர், ஆயர்வேத வைத்தியர் விமுக்தி டி சொய்சா, இலங்கையின் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிககும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நிலைமையில், நாட்டின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய சுதேச வைத்திய துறைக்கு பாரிய தாக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வைத்திய முறைமை தொடர்பில் தகைமையுடைய மற்றும் அறிவுமிக்க வைத்தியர்கள் இருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், அதனை செயற்படுத்தாது, பாரம்பரியம் எனக்கூறும், தகைமையற்ற நபர்களின் சிலசில பரிந்துரைகளின் மூலம் கிடைக்கும் ஒளடதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம் என இலங்கை அரச ஆயர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர், ஆயர்வேத வைத்தியர் விமுக்தி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த பரவல் நிலைமைக்கு மத்தியில், ஆயர்வேத, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு மருந்து என எந்தவொரு மருந்து கிடைத்தாலும், சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதை மறக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.