கைதிகள் படுகொலை, படுகாயம் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரோத உணர்வு அரசை தடுமாற்றம் காண வைத்துள்ளது
சிறை கைதிகள் என்பவர்கள் அரசாங்க காவலில் வைக்கப்படுபவர்கள். அவர்களது உயிர்களுக்கு அரசாங்கமே உத்தரவாதம் தர வேண்டும். மேலும் அவர்களில் பெரும்பாலோர், விசாரணை முடிவுராத தடுப்பு காவல் கைதிகள். அதற்காக விசாரணை தண்டனை முடிவுற்ற தண்டனை கைதிகள் "கொல்லப்படலாம், தாக்கப்படலாம்" என்பதில்லை. அரசாங்கம், அனைவருக்கும் உயிர், உடல் பாதுகாப்பை தர ஐநா விதிமுறைகளுக்கு ஏற்ப கடமைபட்டுள்ளது.
இலங்கையில் சிறை கலவர படுகொலைகள் வரலாற்றில் புதிது அல்ல. இப்போதைய மஹர சிறை சாவுகள் போல, 2012ம் ஆண்டில் இதே ஆட்சி நிர்வாகத்தில் பல கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன் முன் வரலாற்றில் பதிந்து விட்ட,1983ம் ஆண்டின் வெலிக்கடை தமிழ் சிறை கைதிகள் படுகொலைகள், 1997ம் ஆண்டின் களுத்துறை தமிழ் கைதிகள் படுகொலைகள், 2000ம் ஆண்டின் பண்டாரவளை பிந்துனுவெவ சிறை முகாம் படுகொலைகள் என்பன இலங்கையின் சிறை நிர்வாக இலட்சணத்தை படம் பிடித்து காட்டுகின்றன. 1998ம் ஆண்டில், இன்றைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, களுத்துறை சிறைச்சாலை தமிழ் கைதிகளால் மிக கடுமையாக தாக்கப்பட்டார்.
இதற்கிடையில், உட்கொண்டால் இரத்தத்தை பார்க்க தூண்டும் எனக்கூறப்படும், “ரிவர்ஸ் மாத்திரை” என்ற போதை மாத்திரையை, கைதிகளை உட்கொள்ள வைத்து, அதன்மூலம் கலவரம் ஏற்படுத்தி, கோதாபய அரசை சர்வதேசம் முன், கேவலபடுத்த ஒரு சதி நடைபெற்றுள்ளது என “5000/= ரூபா புகழ் வீரவன்ச” சபையில் கூறுகிறார். அரசாங்கம் இச்சம்பவங்கள் பற்றி விசாரித்து அறிய ஒரு விசாரணை குழு அமைத்துள்ளது. அந்த குழு விசாரித்து கண்டுபிடிக்க முன் “5000/= ரூபா” கண்டு பிடித்து கூறுகிறது. பொலிஸ் பேச்சாளர் பிரதிமாஅதிபர் அஜித் ரோஹன, இந்த விசாரணை குழுவில் இடம் முடியாது என கூறியது சரி என்றாலும், பின்னர், இந்த “ரிவர்ஸ் மாத்திரை” கதைக்கு அவரும் சாமரம் வீசும் முறையில் ஊடகங்களில் தோன்றி பேசுகிறார். இது பிழை. இதையே நேற்று இரவு தெரண டீவியில் தோன்றி நான் கடுமையாக கண்டித்து சொன்னேன்.
சிறைசாலைகளில் போதை வஸ்துகள் இருப்பது சட்டவிரோதம். பிழை. குற்றம். அதில் மறு பேச்சுக்கு இடமில்லை. ஆனால், இலங்கை சிறைகளில் இத்தகைய வஸ்துகள் இருப்பது இது முதன் முறையல்ல. அதிசயமுமல்ல.
எனவே அதை காரணமாக காட்டி, இந்த கலவரம், “கோதாபய அரசை சர்வதேசம் முன் கேவலபடுத்த. செய்யப்பட்ட ஒரு சதி” என்று கூறி முடிச்சு போட முயல்வது, “அம்மாஆஆஆடியோவ்..” என சொல்ல வைக்கிறது.
கைதிகள் படுகொலை, படுகாயம் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரோத உணர்வு அரசை தடுமாற்றம் காண வைத்துள்ளது. "விசாரணை குழுக்களை அமைக்கின்றீர்கள். ஆனால், அறிக்கைகள் வெளியே வருவதில்லேயே" என்று நேற்றிரவு நான் தெரண டிவி நிகழ்சியில் கேட்டேன். "மினுவாங்கொடை Brandix ஆடை தொழிற்சாலை கொரோனா விசாரணை அறிக்கை எங்கே" என்று கேட்டேன்.
இதுவரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பதினொரு கைதிகளில் ஒன்பது பேருக்கு கொரோனா என கண்டறியப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா என தெரியவில்லை. ஆகவே, 800 பேர் இருக்க வேண்டிய சிறை கூடத்தில் 3000 கைதிகள் மிகவும் நெரிசலில் இருந்துள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகின்றது.
இந்த நெருக்கடி சூழலில் எல்பிஎல் நடத்தும் அரசாங்கம் ஒரு பெரிய விளையாட்டரங்கை எடுத்து, அதில் கூடாரம் அமைத்து, சுற்றி அதிரடி பொலிஸ் காவல் போட்டு, தடுப்பு காவல் கைதிகளை அங்கு தங்க வைக்கலாமே அதன்மூலம் சிறை நெருக்கடியை தளர்த்தலாமே! நேற்றிரவு இதை சிங்கள டீவியில் சொன்னேன்.
மஹர சிறைசாலையில் இருந்த தமது உறவுகளுக்கு என்ன நிகழ்ந்துள்ளது என தெரியாமல், தவிக்கும், நிறைய அப்பாவி சிங்கள பெற்றோர், இன்று காலை என்னை தொலைபேசியில் அழைத்து நன்றி கூறுகின்றார்கள் என்று தெரிவித்தார்.