நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை
அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் ஆறு புதிய நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளது. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை எமது அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்ததமை பெருமை அளிக்கிறது என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
“நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி அவர்கள், 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.
நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அது ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.
நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
பிரதம நீதியரசர் ஜயந்த சி. ஜயசூர்ய, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.