நாடாளுமன்ற உத்தியோத்தர்கள் எவருக்கும், இதுவரை கொரோனா
தொற்று உறுதி செய்யப்படவில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் சிலர், காய்ச்சல் காரணமாக, நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட RAPID ANTIGEN பரிசோதனையில், கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தம்மிக்க தஸநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அவர்கள் 14 நாட்களுக்கு, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த உத்தியோகத்தர்கள் பணிபுரிந்த இடங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இதுவரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற அலுவல்கள், எந்தவித தடங்கல்களும் இன்றி வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.