ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
ராஜபக்ஷ குடும்பம் எப்பொழுதும்
மனிதாபிமானமுள்ளோர் என்பதோடு மதங்களை மதிப்பவர்கள். கொரோனாவினால் மரணிப்போரை எரிக்கும் விடயத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது வள நிலங்களில் முடியுமான எல்லாவற்றையும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாயிகள் தமது உற்பத்திகளை நாடுமுழுவதற்கும் ஏற்றுமதி செய்த காலமொன்று இருந்தது.
ஆனால் ஜே.ஆர் அரசு இலங்கையை வெளிநாட்டு குப்பை தொட்டியாக்கியது. எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதால் நாட்டு மக்கள் சோம்பேறிகளாக மாறுவர். எமது காணிகளை வெளிநாடுகளுக்கு விற்கும் தலைவர்கள் கடந்த காலத்தில் இருந்தனர்.
மேலும் 8 வீதம் இருக்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விடுத்து கிடைக்கும் சம்பளத்தில் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அன்று 95 ரூபா சம்பளம் வாங்கிய ஆசிரியர் ஒருவருக்கு மாத இறுதியில் மிச்சம் இருந்தது.
ஆனால் ஒவ்வொரு பட்ஜட்டிலும் சம்பள உயர்வு பற்றி தான் பேசுகிறார்கள்.அந்த கலாசாரத்தை மாற்றி, இருக்கும் சம்பளத்தில் வாழும் வகையில் நியாயமான விலையில் பொருட்கள் சந்தையில் இருக்க வேண்டும்.
மரணித்தவர்களின் உடல்களை எரிக்கின்ற ஒரே ஒரு விடயத்தில் தான் குறைபாடு இருக்கிறது. ஆனால் ராஜபக்ஷ் குடும்பம் எப்பொழுதும் மனிதாபிமானமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லோருடைய மதங்களையும் மதிப்பவர்கள்.
அவர்கள் தொடர்பில் நிறைய நம்பிக்கையுள்ளது. நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களும் மதவழிபாடுகளை மதிப்பவர்களாக உள்ளனர். இந்தக் குறை விரைவில் தீரும் என நம்புகிறோம் என்றார்.