கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் அனைத்தையும் மன்னாரில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.
கொவிட் -19 வைரஸ் தொற்று தாக்கத்தில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உயிரிழந்தவர்களை அவரவர் பிரதேசங்களில் அடைக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களை அவர்களின் சடங்குகளுக்கு ஏற்ப அடக்கம் செய்ய பிரதமர் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்ததாக அறிந்து கொள்ள முடிந்தது.
அதனை நாம் வரவேற்கிறோம். அவரவர் மதச் சடங்குகளுக்கு அமைய உடல்களை அடக்கம் செய்ய வேண்டும். அதுவும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வேறு தகவல்களும் வெளிவருகின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த யோசனைகளை முன்வைத்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது.
கடல் உள்ள காரணத்தினால் மன்னார் உகந்த பிரதேசம் என கூறியுள்ளதாக அறிய முடிகிறது. இது உண்மையான காரணியாக இருந்தால் இலங்கையை சுற்றி கடல்தான் உள்ளது. ஆகவே அந்தந்த மாவட்டங்களில் ஒரு பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமே தவிர அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யக் கூடாது, அது மக்களிடையே தவறான சிந்தனையை உருவாக்கும் என்றார்.
கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் அனைத்தையும் மன்னாரில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.
Reviewed by Madawala News
on
November 19, 2020
Rating: