(அன்சார் எம்.ஷியாம்)
கொவிட்-19 தொற்று காரணமாக மரணமடைபவர்களைத் தகனம்
செய்வதற்கெதிரான- அடிப்படை மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் முருது பெர்ணண்டோ மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப் பட்டது.
சுமார் மு.ப.10.30 மணியளவில் வழக்குத் தொடுனர்கள் சார்பில், முன்னணி சட்டத்தரணிகளான விரான் கொரியா, பய்ஸால் முஸ்தபா, சாலிய பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன், என்.எம்.ஷஹீத், நிஸாம் காரியப்பர் ,ஷப்ரி நிலாம்தீன், ஹஸ்திக தேவேந்திர ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன் வைத்தார்கள்.
உலகின் பெரும்பாலான அனைத்து நாடுகளிலும் உலக சுகாதார நிறுவனத்தின் கொவிட் 19 விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு- தகனம் செய்வதற்கோ அல்லது புதைப்பதற்கோ இரண்டுக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் கடல் மட்டத்திலிருந்து பலநூறு அடியில் காணப்படும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் கூட இரண்டுக்குமான அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஆனால், இலங்கையில் புதைப்பதற்கான அனுமதி மறுக்கப் படுவது அடிப்படை மனித உரிமைகளை மீறும் ஒரு செயலாகும் என்ற வாதத்தை சட்டத்தணி பய்சால் முஸ்தபா முன்வைத்தார்.
மேலும்- சட்டத்தரணி என்.எம். ஷஹீத், தற்போது முஸ்லிம்களிடம் சவப் பெட்டிகள் கோரும் ஒரு நிலையும் காணப்படுவதால், தகனம் செய்வதற்கெதிரானவர்கள் தமது உறவினர்களின் சடலங்களை மோர்ச்சரியில் விட்டுச் செல்லும் பரிதாபகரமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது என்றும் தன் வாதத்தை முன்வைத்த வேளையில் குறித்த கருத்தை வலியுறுத்தினார்.
இவ்வாறு- கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சார்பில் ஆஜராகிய மேற்குறித்த சட்டத்தணிகள் தமது வாதங்களை முன்வைத்தார்கள்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக எதிர்வாதம் தொடங்கி வைக்கப்பட்ட அதேவேளை- பேராசிரியர் மெத்திகா விதானகே சார்பில் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவும் ஆஜராகி இருந்தார்.
அனேகமான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப் பட்ட போதும், இன்று பி.ப. 4.30 மணியுடன் வாதப் பிரதிவாதங்கள் நிறைவுற்ற அதே வேளை இதன் அடுத்த அமர்வு நாளைக் காலை 10.30 வரை ஒத்திப் போடப்பட்டுள்ளது.
கொவிட்- 19 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு: இன்று நடந்தது என்ன ? - ஒரு சிறு பார்வை.
Reviewed by Madawala News
on
November 30, 2020
Rating: