இன்று (22.10.2020) இலங்கை வரலாற்றின் அதிகாரபீடம் அனைத்ததிகாரத்தையும் தன்வசப்படுத்தி அடக்கியாளும் முறையை சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றுக் கொள்ள முனையும் 20ம் அரசியல் சீர்திருத்தம் பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு வருகிறது.
கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கு இருந்த கட்டுக்கடங்காத அதிகாரங்களை குறைத்து ஆனைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்கி, நீதி மன்ற சுயாதீனத்தை உறுதி செய்த 19வது அரசியல் சீர்திருத்தம் கடந்த ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது.
அரசாட்சிக்கு நிகரான கேள்விக்கு இடமில்லாத வகையில் ஜனாதிபதி பதவிக்கு வழங்கப்பட்டிருந்த பெரும் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு ஜனாதிபதியையும் தவறு நடந்தால் கேள்வி கேட்கலாம் என்ற ஜனநாயகம் 19 மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஜனநாயகத்திற்கு உயிரோட்டம் வழங்கிய 19ம் திருத்தத்தை நீக்கி 20ம் திருத்தத்தை கொண்டுவரும் முழு முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது.
20ம் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள தமது கட்சிக்குள்ளும் இருக்கும் எதிர்ப்பை சமப்படுத்தும் வகையில் எதிர்கட்சியிலிருந்து சிலரின் ஆதரவை பெற்றுக்கொள்ள ஆளும் தரப்பு முயன்றது.
அதன் விளைவாக ஆளும் தரப்புக்கு ஆதரவாக 20ம் திருத்தத்தை ஆதரித்து கை உயர்த்த ஒரு சில முஸ்லிம் எம்.பி க்கள் தயாராகியுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பிட்ட சில முஸ்லிம் எம்.பி க்களின் இந்த முடிவு தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை அழித்தொழிக்கும் ஆபத்தான முடிவு மாத்திரமன்றி மீண்டும் இந்த நாட்டில் அடக்கியாளும் ஓர் அரசை உருவாக்கும் கருப்பு சட்டத்தின் பங்காளிகளாக ஆகும் நிலையை இது உண்டாக்கி விடும்.
எனவே அந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஜனநாயக விரோத செயல்பாட்டில் பங்களிக்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் 20 ம் திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று சமூக நலன் கருதி வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.
ஹிதாயத் சத்தார்
முன்னால் உறுப்பினர்
மத்திய மாகாண சபை
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு அவரச கோரிக்கை.
Reviewed by Madawala News
on
October 22, 2020
Rating: