(தற்போதைய சூழ்நிலையில் Covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு பாடுபடும்
அரசுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவது எமது கட்டாய கடமை என்பதனை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்)
(BY:MFM.HAJITH)
Covid-19 எனப்படும் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. இதற்கு எமது இலங்கையும் விதிவிலக்கல்ல.
ஆட்டிப் படைக்கும் இவ் வைரஸ் எமது மக்களின் ஜீவனோபாயத்தை குழி தோன்டிப் புதைத்திருக்கிறது. அன்றாடம் உழைத்து வயிறாரும் ஒவ்வொருவரினுடைய வயிற்றிலும் இது அடித்திருக்கின்றது.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால் பணம் பசித்த வயிற்றுக்கு இரையாகது என்பதனை இத் தருணம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.
கை நிறைய பணமிருந்தும் பை நிறைய பொருட்கள் வாங்க முடியாத செல்வந்தர்கள் பணத்தை உண்ண முடியாது என்பதனை தெட்டத்தெளிவாக இத் தருணத்தில் உணர்ந்து இருக்கின்றார்கள்.
காலமெல்லாம் கண்ணீருக்குள்ளும் கற்பனைகளுக்குள்ளும் மிதக்கும் ஏழைகளின் மனநிலையை இன்று அதே மனநிலையில் இருந்து உணர்ந்திருக்கின்றார்கள்.
இது இவ்வாறிருக்க, நாட்டினுடைய தற்போதைய நிலையால் பலர் குழந்தைகளை வைத்துக் கொண்டு வீட்டினுள் அடைபட்டு உண்ண உணவில்லாமல் "கெளரவம்" எனும் ஒற்றை வரிச் சொல்லால் வெளியில் வாயால் கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இன,மதங்களைக் கடந்து எம்முடைய மனித நேயத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் துயர் துடைக்க வேண்டும். அதற்காக ஒரு பொதியை கொடுத்து விட்டு ஒன்பது புகைப்படம் எடுத்து அவர்களை சங்கடப்படுத்தக் கூடாது. ஏன் இவர்களிடம் கை நீட்டி வாங்கினோம் என்று அவர்களை சிந்திக்க வைத்து விடக்கூடாது.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொரோனா இருக்கிறதா? என்று சந்தேகத்தில் பார்ப்பதைப் போன்று அவனுடைய வீட்டில் உண்ண உணவு இருக்கிறதா? என்றும் கொஞ்சம் உற்றுப் பார்ப்போம்.
இந்த உலகினுடைய இக்கட்டான இந்த நிலையை சிலவேளை எங்களுடைய தானதர்மங்கள் தலை கீழாக மாற்றி விடும். முற்றுப்புள்ளி இல்லாமல் நகரும் இந்தக் கொரோனாவை சில வேளை நாங்கள் செய்யும் சிறிய உதவிகளினால் பூரிப்படைந்து இறைவனிடம் கையேந்திக் கேட்கும் ஏழைகளின் பிராத்தனைகள் சரி செய்து விடும்.
வெகுவிரைவில் கொரோனா எனும் கொடிய தொற்றிலிருந்து முழு உலகமும் மீண்டு வர எல்லாருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக.
(குறிப்பு: சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று சுகாதார நடைமுறைகளைப் பேணி உதவி செய்யுங்கள்)